பிரித்தானியாவில் தீவிரமடையும் கொரோனா அச்சுறுத்தல்! ஒரே நாளில் 1243 பேர் பலி

பிரித்தானியாவில் மேலும் 45,533 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 83,203 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் ஒரே நாளில் 1,243 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் பதிவான இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்பு இதுவாகும்.

அரசாங்க தரவுகளின்படி, பிரித்தானியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இப்போது 3,164,051 ஐ எட்டியுள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 32,202 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஒப்பிடும்போது 22 வீத அதிகரிப்பாகும். அத்துடன், கிறிஸ்துமஸ் தினத்திலிருந்து ஒப்பிடும் போது 82 வீத அதிகரிப்பாகும்.

லண்டன், வட கிழக்கு மற்றும் யார்க்ஷயர் தவிர அனைத்து பிராந்தியங்களிலும் தற்போது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளன.

திங்கட்கிழமை நிலவரப்படி, வைத்தியசாலைகளில் 3,055 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக பிரித்தானியாவில் வைத்தியசாலைகள் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளன.

இந்நிலையில், பெப்ரவரி 15ம் திகதிக்குள் முதல் நான்கு முன்னுரிமை குழுக்களில் உள்ள 15 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்ட தடுப்பூசி திட்டத்தின் முதல் கட்டத்தை அரசாங்கம் அதிகரித்து வருகிறது.

இதில் முன்னணி சுகாதார ஊழியர்கள், பராமரிப்பு இல்லங்களில் இருப்பவர்கள் மற்றும் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் உள்ளனர்.

அரசாங்கத் திட்டங்களின் கீழ், 50 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் வசந்த காலத்திற்கு முதல் தடுப்பூசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.