சிறிலங்கா அரசின் தீர்மானம் தொடர்பில் பிரித்தானியா கடும் அதிருப்தி!

இலங்கை அரசாங்கம், தொடர்ந்தும் கொரோனாவினால் மரணமாவோரை கட்டாயமாக தகனம் செய்து வருவது குறித்து பிரித்தானிய அரசாங்கம் மீண்டும் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே இந்த விடயம் தொடர்பில் தாம் கவனத்தை திருப்பியிருந்தாக பிரித்தானியாவின் தெற்காசியா மற்றும் மனித உரிமைகள் இராஜாங்க அமைச்சர் தாரிக் அஹ்மத் பிரபு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனாவினால் மரணமாகும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் கட்டாய தகனம் செய்யப்பட்டு வருவது குறித்து எதிர்க்கட்சி மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் தமது எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த விவகாரத்தை ஆய்வு செய்வதற்கான நிபுணர் குழுவின் நிலைப்பாடு மாறாமல் உள்ளது என்றும் எனவே சுகாதார வழிகாட்டுதலின்படி தகனம் செய்யப்படும் என்றும் இலங்கையின் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி சமீபத்தில் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.

இந்தநிலையில் எதிர்வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னதாக இந்த விஷயத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று பிரித்தானிய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்தின் அமைச்சர் தாரிக் அஹமது மற்றும் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் நடத்திய தொலைபேசி உரையாடலின் போது இது தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.