நில அபகரிப்பு தொடர்பில் யாழில் முக்கிய தீர்மானம்

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் வகையில் அனைத்துத் தரப்புகளையும் ஒன்றிணைத்த முக்கிய கலந்துரையாடல் இன்று நல்லூர் இளம் கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் மதத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பது என்பது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

மேலும் வடக்கு – கிழக்கில் தமிழரின் பாரம்பரிய இடங்கள் தொல்பொருள் ஆய்வு என்ற பெயரில் அபகரித்தல் மற்றும் காணி சுவீகரிப்புகள் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிராக செயற்பட்டு வாழ்வுரிமையைப் பாதுகாப்பது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.

நாட்டின் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். தமிழ் மக்கள் தேசியக் கூட் டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

எமக்கு எதிராக சிங்கள அரசாங்கங்கள் மேற்கொண்டு வரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையாக நில அபகரிப்பு காணப்படுகின்றது.

இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல், எமது நிலங்களை அபகரிப்பதற்கு பல்வேறு உபாயங்களை அரசாங்கங்கள் கையாண்டுவருகின்றன.

நீர்ப்பாசன அபிவிருத்தி என்ற போர்வையில் ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் ஊடாக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்புக்களில் கிழக்கு மாகாணத்தில் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இனப்பரம்பலில் செயற்கையான மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில், குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் வன்முறைகளின் ஊடாக தமிழ் கிராமங்கள் பலவற்றில் தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டு அவை முற்றாக சிங்கள மற்றும் முஸ்லிம் கிராமங்களாக இன்று மாற்றப்பட்டுவிட்டன.

30 வருடங்களாக யுத்தம் நடைபெற்றபோது வட மாகாணத்தின் ஏறத்தாழ முழுமையான பகுதியும் கிழக்கு மாகாணத்தின் பெரும்பான்மையான பகுதிகளும் எமது இளைஞர்களின் கட்டுப்பாட்டில் இருந்தமையினால் அம்பாறை, திருகோணமலையில் நடந்தது போல பெருமளவில் எமது நிலங்களை அரசாங்கங்களினால் அபகரிக்க முடியவில்லை. ஆனால், 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர், வடக்கு கிழக்கின் எல்லா மாவட்டங்களிலும் எந்தவித எதிர்ப்பும் இன்றி எமது நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன.

ஒருபுறம் நீர்ப்பாசன திட்டங்கள் என்ற போர்வையில் நிலங்கள் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பறிக்கபப்டுகின்றன. மறுபுறம், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பை இராணுவம் தன் வசம் வைத்துள்ளது.

இதில், இராணுவ முகாம்கள் மட்டுமல்ல இராணுவ குடியிருப்புக்களும் உள்ளடங்கும். இவை தவிர, அரசாங்கம் எமது நிலங்களை அபகரிக்கும் நடவடிக்கைகளில் அரச இயந்திரத்தை முழுமையாக பயன்படுத்திவருகின்றது.

வன இலாகா, வன விலங்குகள் திணைக்களம், தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம், மகாவாலி அதிகாரசபை ஆகியவை இவற்றுள் உள்ளடங்கும்.

எவ்வளவு வேகமாக நாம் எமது நிலங்களை இழந்துகொண்டிருக்கின்றோம் என்பதற்கு முல்லைத்தீவு மாவட்டத்தை ஒரு உதாரணமாக சொல்கின்றேன்.

எமது மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ரவிகரனின் புள்ளி விபரங்களின் படி முல்லைத்தீவின் மொத்த நிலப்பரப்பு 6, 21, 917. இதில், 4, 20, 300 ஏக்கர் அடர்ந்த காடு. ஆகவே, மக்கள் பயன்பாட்டுக்கு இருக்கும் நிலப்பரப்பு 201,617 ஏக்கர் ஆகும்.

இதில், ஆகக்குறைந்தது 80,000 ஏக்கர் நிலம் இராணுவம் மற்றும் அரச திணைக்களங்களின் கீழ் பறிக்கப்பட்டுள்ளது.

இந்த புள்ளிவிபரத்தின்படி, முல்லைத்தீவு மாவட்டத்தின் மக்கள் பயன்பாட்டுக்குரிய நிலபபரப்பில் ஏறத்தாழ 40% நிலம் எம்மிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டது. இந்த சிறிய உதாரணம் எம்மை சூழ்ந்துவரும் ஆபத்தை வெளிப்படுத்துகின்றது.

ஆனால், கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பின்னரான கடந்த 10 வருட காலப்பகுதியில், நில அபகரிப்புக்கு எதிராக நாம் உள்ளூர் மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் காத்திரமான எதிர்ப்பு நடவடிக்கைகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதே உண்மையானது. உள்நாட்டு சட்ட ரீதியாக மேற்கொள்ளக்கூடிய விடயங்களை நாம் முளுமையான அளவில் மேற்கொள்ளவில்லை.

அதேபோல, சர்வதேச சட்டம், சர்வதேச மனித உரிமைகள் கட்டமைப்புக்கள், ஒப்பந்தங்கள் , கோட்பாடுகள், போன்வற்றையும் நாம் முழுமையான அளவில் பயன்படுத்திக்கொள்ளவில்லை. இவற்றுக்கு மேலதிகமாக, சர்வதேச ஊடகங்களின் ஊடாக எமக்கு எதிரான நிலஅபகரிப்பை நாம் வெளிப்படுத்த வேண்டும்.

ஐ. நா மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகள், வெளிநாட்டு அரசாங்கங்கள், சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், தூதரகங்கள் போன்றவற்றின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திட்டமிடப்பட்ட சிறப்பான lobbying செயற்பாடுகளை நாம் முன்னெடுக்கவேண்டும்.

ஆனால், இவற்றையெல்லாம், நாம் மேற்கொள்வதற்கு எமக்கு எதிரான நில அபகரிப்புக்கள் தொடர்பில் நம்பகத்தன்மையான நவீன தொழில்நுட்ப முறைகளில் அமைந்த ஆவணப்படுத்தல் பொறிமுறையும் ஆய்வும் அவசியம்.

சர்வதேச தராதரங்களுக்கு அமைவான ஆவணப்படுத்தல் மற்றும் ஆய்வு செயற்பாடுகளை நாம் முன்னெடுப்பது எமக்கு எதிரான நில அபகரிப்பு பற்றி சர்வதேச அளவில் நம்பகத்தனமையானமுறையில் ஒரு விழிப்புணர்வையும் கவனத்தையும் ஏற்படுத்துவதற்கு உதவும்.

மறுபுறத்தில், அரசியல் ரீதியாக சர்வதேச அளவில் நாம் lobbying நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மட்டுமன்றி உள்ளூரில் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இது பெரிதும் உறுதுணையாக இருக்கும்.

ஆகவே, நில அபகரிப்புக்கு எதிரான எமது செயற்பாடுகளை நாம் வெறுமனே ஆர்ப்பாட்டங்ககள், நீதிமன்ற நடவடிக்கைகளுடன் மட்டும் நிறுத்திவிடாமல் மேற்குறிப்பிட்ட அறிவு , தகவல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையிலான நடவடிக்கைளில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

உதாரணமாக, பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் நில அபகரிப்பு பற்றி சர்வதேச ரீதியான விழிப்புணர்வு இருக்கிறது. இதற்கு காரணம், அவை பற்றியா முறையான ஆவணப்படுத்தல், ஆய்வுகள், பரப்புரைகள், ஊடக வெளியீடுகள் நடைபெற்றிருப்பதுதான்.

எமக்கு எதிராக என்ன நடைபெறுகின்றது என்பது பற்றி எமக்கே சரியான புரிதல்கள் இன்றி இருக்கும் ஒரு துரதிஷ்டமான நிலைமையே காணப்படுகின்றது.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறும் நில அபகரிப்பு பற்றி ஆராய்வு செய்த யூத பேராசிரியரான Oren Yiftachel என்பவர் அவற்றை ethnocratic land practices என்று குறிப்பிடுகிறார்.

ஏனென்றால், ஜனநாயகம் சட்டம் ஆகியவற்றின் போர்வையில், ஒரு நாட்டில் தனி ஒரு இனத்தின் மேலாண்மையை நிலைநிறுத்தும் வகையில் ஒரு அரசு தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளுமானால் அதனை ethnocratic regime என்று அவர் கூறுகிறார்

இஸ்ரேலைபோல ஒரு ethnocratic நாடக இருப்பதற்கான அத்தனை பண்புகளும் இலங்கைக்கு இருப்பதாக அவர் கூறுகிறார்.

இதுபோன்ற விடயங்களை மேலும் ஆய்வு செய்து, அல்லது இந்த வாதத்தினை பலப்படுத்தும் நோக்கில் ஆதாரங்களை சேமித்து ஆவணப்படுத்தி எவ்வாறு எமக்கு எதிராக நில ஆக்கிரமிப்புக்கு நீதியை பெறுவதற்கு நம்பகத்தன்மையான ஆதிக்கம் நிறைந்த கருத்து வினைப்பாட்டை நாம் மேற்கொள்ளலாம் என்று சிந்தித்து விஞ்ஞான ரீதியாக நாம் செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.