ஜெனிவா நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கு -ஆணைக்குழு உத்தி

ஜெனிவா நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கு ‘ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று’ நியமிக்கப்படும் என்று கடந்த திங்கட்கிழமை அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் உதய கம்பன்பில தெரிவித்திருந்தார்.

சரியாக 72 மணிநேர இடைவெளியில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவில் ‘அதியுத்தமனாரின்’ ஆணைப்படி மூவர் அடங்கிய ‘ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை’ வர்த்தமானி அறித்தலை வெளியிட்டு நியமித்திருக்கின்றார் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர.

உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாஸ் தலைமையில் ஓய்வு பெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்ணான்டோ, ஓய்வு பெற்ற மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி ஆகியோரே அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின்’ உறுப்பினர்கள் ஆவர்.

இந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிடத்தில்,

அ.மனித உரிமை மீறல்கள் தொடர்பாக புலனாய்வு செய்வதற்காக ஆரம்பத்தில் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் மூலம் நடத்தப்பட்ட புலனாய்வுகளின்போது பாரதூரமான வகையிலான மனித உரிமை மீறல்கள், பாரதூரமான அளவில் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறுதல்கள் மற்றும் வேறு அவ்வாறான பாரதூரமான குற்றங்கள் தொடர்பாக கண்டறியபப்பட்டுள்ளதா என்பதையும்,

ஆ.விசாரணை ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களினால் பாரதூரமான அளவில் மனித உரிமை மீறல்கள், பாரதூரமான அளவில் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் அவ்வாறான தவறுகள் தொடர்பாகக் கண்டுபிடிக்கப்பட்ட விடயங்கள் யாது என்பதனை இனங்காணுதல் மற்றும் சொல்லப்பட்ட விடயங்கள் தொடர்பாக செயற்பட்ட விதம் குறித்த பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்,

இ.பரிந்துரைகள் தொடர்பாக நடைமுறையிலுள்ள சட்டங்களுக்கமைய இதுவரை செயற்பட்டுள்ள விதம் மற்றும் தற்போதைய அரச கொள்கைகளுக்கமைய மேலும் அப்பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிகைள் என்பதையும்

உ. மேற்குறிப்பிடப்பட்ட (ஆ) மற்றும் (இ) இன் வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பது தொடர்பாக மேற்பார்வைசெய்தல், ஆகிய நான்கு பிரதான பணிகள் ஆறுமாத கால அவகாசத்துடன் வழங்கப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 22ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 19ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. இந்த பின்னணியில் தான் இத்தகைய விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. “ஜெனிவா தீர்மானத்திலிருந்து வெளியேறுகின்றோம் என்றும் அழுத்தங்கள் அதிகரித்தால் இலங்கையின் இறைமையையும், படைவீரர்களையும் பாதுகாப்பதற்காக சர்வதேச அமைப்புக்களிலிருந்து வெளியேறும் கடினமான தீர்மானத்தினையும் எடுக்கத் தயங்கப்போவதில்லை” என்று அறிவித்த ஜனாதிபதி கோட்டாபய தான் தற்போது ஆணைக்குழுவை நியமிப்பதற்கு ஆணை வழங்கியிருக்கிறார்.

எதிர்வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்படவுள்ள புதிய தீர்மானத்திற்கு அனுசரணை அளிக்குமாறு ஐ.நா. இணை அனுசரணை நாடுகள் கோரியபோதும் அதனை ‘துடுக்காக’ நிராகரித்து விட்டுத்தான் ஆணைக்குழு அறிவிப்பைச் செய்திருக்கின்றார் கோட்டாபய.

இம்முறை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தினை மீளப்பெற்று அதனை மீண்டும் ஐ.நா.செயலாளர் நாயகத்திடம் அனுப்பி வைக்குமாறு பாதிக்கப்பட்ட தரப்பின் ஆணைபெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் கூட்டாக ஐ.நா.உறுப்பு நாடுகளிடத்தில் கோரியுள்ளன.

பாதிக்கப்பட்ட தரப்பே இவ்வாறான கோரிக்கையை விடுத்துள்ள நிலையில் ஐ.நா உறுப்பு நாடுகள் ‘வலிந்து’ பொறுப்புக்கூறல் விடயத்தினை ‘கடினமான’ நிலையில் தாம் கொண்டு வரும் தீர்மானத்தில் வைத்திருக்கப்போவதில்லை. ஆகவே இலங்கை தொடர்பான புதிய தீர்மானமானது, பொறுப்புக்கூறலை வலியுறுத்தாததாகவே இருக்கப்போகின்றது.

அத்தகையதொரு தீர்மானத்தினை பார்த்து கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் அச்சமடைகின்றது என்பதும் அத்தீர்மானத்தினை சமாளிப்பதற்கு இத்தகையதொரு ஆணைக்குழுவை நியமிக்கின்றது என்பதும் வேடிக்கையானதாக இருக்கின்றது. மேலும், இந்த விசாரணை ஆணைக்குழுவானது தனது பணிகளை நிரல்படுத்திக் கொண்டு ஒன்றிரண்டு அடிகளை முன் வைக்கும் போதே மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் நிறைவுறும் தறுவாயை எட்டிவிடும் என்பதையும் இங்கு குறிப்பிட்டுக் கூற வேண்டியுள்ளது.

அப்படியானால், இந்த ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளதன் நோக்கம் சம்பந்தன், விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் சுமந்திரன் உள்ளிட்ட தமிழ்த் தலைவர்கள் குறிப்பிட்டதைப் போன்று ‘வெறுமனே கண்துடைப்புக்கானது” தான். ராஜபக்ஷவினர் தமது ஆட்சிக்காலத்தில் (கடந்த ஆட்சிக்காலத்திலும் சரி, தற்போதைய காலத்திலும் சரி) ஜனாதிபதிக்குள்ள விசாரணை ஆணைக்குழுச் சட்டத்தின் பிரகாரம் எண்ணற்ற ஆணைக்குழுக்களை நியமிப்பதொன்றும் புதிய விடயமல்ல.

தற்போதைய ஜனாதிபதியின் தமையனார் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தின் 2005-2010 ஆண்டு வரையிலான முதலாம் அத்தியாயத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி நிஷங்க உதலாகம தலைமையில் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியில் இருந்து இடம்பெற்ற 5மாணவர்கள் படுகொலை, மூதூர் தொண்டு நிறுவன ஊழியர்கள் படுகொலை உட்பட 16 சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்யும் பொறுப்பு அந்த ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டது.

பின்னர், போர் வெற்றியுடன் அரியாசனம் ஏறிய மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது அத்தியாயத்தில், 2002 சமாதான பேச்சுவார்த்தை முதல் 2009 மே இறுதிக் கட்டப் போர் வரை நடந்த நிகழ்வுகளையும் தோல்விகளையும் முரண்பாடுகளையும் விசாரணை செய்து ‘மீள நிகழாமையை’ தடுப்பதற்காக 2010ஆம் ஆண்டில் மே மாதம் முன்னாள் சட்டமா அதிபர் சி.ஆர்.டி.சில்வா தலைமையில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்கு நியமிக்கப்பட்டது.

அடுத்து, 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் ஆணைக்குழுவொன்றை நியமித்தார். அது 2014 ஆம் ஆண்டு ஜூலை வரை விசாரணைக்கான காலம் விரிவுபடுத்தப்பட்டது.

இதனைவிடவும், அரசியல் தீர்வுக்காக சர்வகட்சிக்குழு உட்பட இதர துணைக்குழுக்கள் பலவும் ‘விரிவுபடுத்தப்பட்ட அதிகார எல்லைவரை’ சென்று நியமிக்கப்பட்டிருந்தன. அனைத்து ஆணைக்குழுக்களும் அறிக்கைகளை சமர்பித்தன. ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் கையளிக்கப்பட்டதன் பின்னரான விளைவுகள் ஒன்றாகவே இருந்தது. ஆணைக்குழுக்களின் அறிக்கைகளுக்கு என்ன நடந்தது என்று அறிவதற்காக ‘ஆணைக்குழுவை’ நியமிக்க வேண்டிய நிலைமையே நீடித்தது.

இந்த நிலைமைகள் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு அவநம்பிக்கையை வலுக்கச் செய்ததோடு, உள்நாட்டில் தமக்கு ‘நீதி, நியாயம்’ ஒருபோதும் கிடைக்காது என்ற இறுதி முடிவையும் எடுப்பதற்கு வித்திட்டது. மேலும், 2012ஆம் ஆண்டு செப்டெம்பரிலும், 2013ஆம் ஆண்டு மார்ச்சிலும் நடைபெற்ற ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் “கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்” என்ற பிரகனடமே செய்யப்பட்டுள்ளது.

2007-2009 வரையில் ஐ.நா.வின்.வதிவிடப்பிரதிநிதியாக இருந்த கலாநிதி.தயான் ஜயதிலக்க, பதவிக்காலம் நிறைவடைந்து திரும்பியதும், “ஜெனிவாவில் அடுத்துவரும் காலப்பகுதியில் ஏற்படவுள்ள நெருக்கடிகளை சுட்டிக்காட்டி அதிலிருந்து மீள்வதற்காக ஐ.நா.வின் 2012, 2013 தீர்மானங்களுக்கு அமைவாக, கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்தவிடத்தில் தான் நேரடியாக வலியுறுத்திய போது அதனை அவர் ஏற்றுக் கொண்டிருந்தார் என்றும் ஆனால் அவரை சுற்றியிருந்தவர்கள் (தற்போது அதியுச்ச ‘அதிகாரபீடத்தில்’ உள்ளவர்கள்) அதற்கு இடமளிக்கவில்லை என்றும் கூறுகின்றார்.

அவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளவர்களால், நிலைபேறான சமாதானம், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மற்றும் மனித வள அபிவிருத்தியை அடைவதற்காக ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட முகவராண்மைகளோடு ஒத்துழைப்புடன் செயற்படுவது என்ற அரசாங்கத்தின் கொள்கையின் அடிப்படையில் ‘ஆட்சி தரத்தை உயர்த்துவதற்காக’ தற்போதைய ஆணைக்குழு நியமிக்கப்படவில்லை என்பது வெளிப்படை.

வெறுமனே சர்வதேசத்துடனான கண்ணாமூச்சி விளையாட்டில் தமையனாரின் வழியில் அதியுத்தமனாரும் பின்பற்றும் ஒரு ‘உத்தியே’ இந்த ஆணைக்குழு நியமனம்.