ஆயிரக்கணக்கானோரின் பங்கேற்புடன் வெள்ளாங்குளம் நோக்கி நகரும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் பேரணி

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் பேரணி இன்று (6) சனிக்கிழமை காலை வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கி சென்று நண்பகல் 12 மணியளவில் மன்னார் மடு சந்தியை சென்றடைந்தது.

பின்னர் மடு சந்தியில் இருந்து ஆரம்பித்த பேரணியானது முருங்கன் ஊடாக மன்னார் நோக்கி சென்றது.

இதன்போது பிரதான வீதிகளில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடிகளில் பொலிஸ் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்ட நிலையில் பல்வேறு தடைகளையும் தாண்டி குறித்த பேரணி மன்னார் பிரதான பாலம் ஊடாக மன்னார் நகரை சென்றது.

மன்னார் பிரதான பாலத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டதோடு, மன்னார் நீதிமன்றத்தின் கட்டளையினையும் பொலிஸார் ஒலி பெருக்கி மூலம் அறியப்படுத்தினர்.

பேரணியாக வந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களின் இலங்கங்களை பொலிஸார் பதிவு செய்த பின்னர் மன்னார் நகர பகுதிக்குள் செல்ல அனுமதித்தனர்.

மன்னார் பிரதான பாலத்தில் இருந்து மன்னார் நகர பகுதியில் உள்ள தந்தை செல்வா சிலையடி வரை குறித்த ஊர்வலம் இடம் பெற்றது.

குறித்த ஊர்வலத்தில் சர்வ மத தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இளைஞர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

பேரணியில் மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளளும், அரசியல் கைதிகளின் உறவுகளும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ள முஸ்ஸீம் மக்களும் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இணைந்து கொண்டனர்.

போராட்டம் மன்னார் நகரில் இருந்து மன்னார் யாழ் பிரதான வீதியூடாக வெள்ளாங்குளம் நோக்கி குறித்த பேரணி சென்றுள்ளது.