சர்வதேச நீதிமன்றுக்கு இலங்கையை கொண்டு செல்லும் வாய்ப்பு – விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை அடிப்படையாக வைத்து சர்வதேச அமைப்புகள் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்து செல்வதற்கான வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளார் இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பிரதீப மகாநாமகேவா.

எனவே ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை எதிர்கொள்வதற்கு இந்தியாவின் ஆதரவு மிகவும் முக்கியமானது எனவும் அவர் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானங்களுக்கு எதிராக இடைக்கால யோசனையொன்றை முன்வைக்கலாம்.

அவ்வாறான சூழ்நிலையில் இந்தியாவின் ஆதரவு இலங்கைக்கு மிகவும் அவசியமானது.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை எதிர்ப்பதை நானும் விரும்புகின்றேன்.

அந்த அறிக்கை நாட்டில் தற்போது காணப்படும் நிலைமைக்கு முரணானது என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை இலங்கைக்கு எதிராக தீர்மானமொன்றை முன்வைத்தால் அதனை எதிர்கொள்வதற்கான திட்டம் அவசியம் என தெரிவித்துள்ள அவர் இலங்கையில் மனித உரிமை நிலவரத்தை முன்னேற்றுவதற்கான திட்டமும் அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.