காணாமல்போனோர் அலுவலகத்தை நடத்திச் செல்ல நாம் விரும்பவில்லை! -அரசின் அறிவிப்பு

காணாமல்போனோர் அலுவலகத்தை நடத்திச் செல்ல அரசு விரும்பவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அத்துடன் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு அரச நிதி ஒதுக்குவதை அரசால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இராணுவத்தைக் கொன்ற, தேசிய பாதுகாப்பைப் பலவீனப்படுத்திய நபர்களுக்கு நட்டஈடு கொடுக்க நாம் அனுமதிக்க முடியாது. பயங்கரவாதிக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுத்து தேசத்தைக் காப்பாற்றியவர்களைத் தண்டிக்கக் கூறுவதில் என்ன நீதி உள்ளது என நாம் கேள்வி கேட்கின்றோம்.

எமக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நாம் பொறுப்புக்கூறலில் இருந்து விடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டு தொடர்ச்சியாக எமக்குப் பாடம் கற்பிக்கவே ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு முயற்சித்து வருகின்றது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் சிறுவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்ட போதும், பொதுமக்களைப் பணயம் வைத்துப் போர் நடத்தப்பட்ட போதும் மனித உரிமைகள் குறித்து பேசாதவர்கள் இன்று இராணுவம் மீதான குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.

அதேபோல் எமது தேசிய விசாரணை பொறிமுறைகளுக்கு சர்வதேசம் இடமளிக்கவில்லை. உள்ளக அறிக்கைகளை நாம் முன்வைத்தால் அது பக்கச்சார்பானது என நிராகரிக்கின்றனர். அப்படியென்றால் எவ்வாறு நாம் முகங்கொடுப்பது? இந்தநிலையில், இம்முறை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் பிரிட்டன் தலைமையில் ஐந்து நாடுகள் கொண்டுவரும் பிரேரணையை நிராகரித்து, இலங்கை புதிய பிரேரணை ஒன்றை முன்வைக்கும் வாய்ப்புகளே அதிகமாக உள்ளன” – என்றார்.