மட்டகளப்பில் கடத்தப்பட்ட யுவதி! தாயார் தூக்கிட்டு தற்கொலை

தனது மகள் கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தால் மனமுடைந்த மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நெல்லிக்காடு, தாந்தாமலை பிரதேசத்தைச் சேர்ந்த தாயொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரு பிள்ளைகளின் தாயான ஏரம்பமூர்த்தி நிஷாந்தி (37 வயது) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரியவருகிறது.

அண்மையில் உயர்தர பிரிவில் பரீட்சை எழுதிவிட்டு வீட்டில் இருந்த தனது மகளை அவரின் விருப்பமின்றி அப்பிரதேச இளைஞன் ஒருவர் திருமணம் செய்து கொள்ளும் நோக்கில் கடத்தி சென்ற நிலையில், சம்பவத்தினை நினைத்து மனமுடைந்த நிலையிலேயே குறித்த தாயார் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.