பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ் விபத்து – 35 பேர் காயம்

பதுளையிலிருந்து  கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று பதுளை – கொழும்பு பிரதான வீதியில் எல்ல அல்ப்ப பகுதியில் குடைசாய்ந்துள்ளது.

பதுளை பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கொழும்பு பகுதிக்கு சென்ற குறித்த பஸ் 06.03.2021 அன்று காலை 9 மணியளவில் பாதையை விட்டு விலகி சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் பஸ்ஸில் பயணித்த 35 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த 35 பேரில், 10 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர், ஏனையோர் சிறு சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இவர்கள் பதுளை மற்றும் தெமோதர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

 

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.