போர்க் குற்ற விசாரணைகள் என்றே பேச்சுக்கே இடமில்லை : சர்வதேச தலையீடுகளை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை – சரத் வீரசேகர

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் பிரேரணை மீது நடத்தப்படும் வாக்கெடுப்பில் நாம் தோற்றாலும் கூட  சர்வதேச நாடுகள் இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் அதிகாரத்தை வழங்கப்போவதில்லை.

யார் வலியுறுத்தினாலும் போர் குற்றங்கள் தொடர்பில் எந்தவொரு விசாரணையையும் நடத்த இடமளிக்க மாட்டோம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இந்த விடயங்களில் இந்தியா இப்போது அமைதியாக இருந்தாலும் இறுதி நேரத்தில் எமக்கு ஆதரவாகவே செயற்படுவார்கள் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்.

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இலங்கையின் நிலைப்பாட்டை நாம் ஏற்கனவே அறிவித்துள்ளோம்.

கடந்த காலத்தில் நல்லாட்சி அரசாங்கம் இந்த விடயங்களில் இலங்கையை பாதுகாக்க தவறிய காரணத்தினால் நாம் முன்னின்று போராட வேண்டிய நிலைமை உருவாகியது.

ஆனால் இப்போது எமது அரசாங்கம் எதனை செய்ய வேண்டுமோ அதனை மிகச்சரியாக செய்து வருகின்றது.

இலங்கையின் நிலைப்பாடு என்ன என்பதையும், நாம் எவ்வாறான நடவடிக்கைகளை கையாள்வோம் என்பதையும், எமது நோக்கம் என்ன என்பதையும் வெளிவிவகாரதுறை அமைச்சர் தெளிவாக எடுத்துக்கூறியுள்ளார்.

எம்மை பொறுத்தவரை மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் முன்வைத்த அறிக்கை பொய்களால் தயாரிக்கப்பட்ட ஒரு அறிக்கையாகும்.

இந்த அறிக்கையை நாம் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். பிரேரணையை நாம் நிராகரிப்பதாக தெரிவித்த பின்னரும் எமக்கு ஆதரவாக பல நாடுகள் குரல் கொடுத்துள்ளனர்.

பிரதான நாடுகள் எம்முடம் உள்ளனர் என்பது எமக்கு தைரியமளிக்கின்றது. இலங்கைக்கு எதிராக பிரேரணையை கொண்டுவந்து நடத்தப்படும் வாக்கெடுப்பில் நாம் தோற்றாலும், சர்வதேச நாடுகள் இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் அதிகாரத்தை வழங்கப்போவதில்லை.

யார் வலியுறுத்தினாலும் போர் குற்றங்கள் தொடர்பில் எந்தவொரு விசாரணையையும் நடத்த மாட்டோம். இராணுவத்தை தண்டிக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் அரசாங்கம் இடமளிக்காது, இந்த பேச்சுக்கே இடமில்லை என்பதே  அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடாகும்.

மேலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில்  இந்தியா எவ்வாறான நடவடிக்கை எடுக்கும் என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.

இப்போது தமிழகத்தில் தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ள நிலையில் அவர்களின் உள்ளக அரசியல் நகர்வுகள் காணப்படும். ஆனால் இந்தியா எப்போதும் இலங்கைக்கு ஆதரவாக செயற்படும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியா இப்போது அமைதியாக இருந்தாலும் அவர் எமக்கு சாதகமாகவே தீர்மானமெடுப்பார்கள் என்றார்.