இலங்கைக்கு எதிரான ஈழத்தமிழர்களின் கோரிக்கையை முற்றாக நிராகரித்தது பிரித்தானியா

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் போதுமான ஆதரவு இல்லாதமையினால் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐ.சி.சி.) பாரப்படுத்த முடியாது என பிரித்தானியா திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பார்ப்படுத்துமாறு கோரி 13,500இற்கும் மேற்பட்ட கையொப்பங்களுடன் அனுப்பட்ட கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக பிரித்தானியா வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஐ.சி.சி.யை நிறுவிய ரோம் சட்டத்தில் இலங்கை கையொப்பமிடவில்லை என்றும், ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் மூலம் மட்டுமே நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க முடியும் என்பதுடன் அத்தகைய பரிந்துரையை வீட்டோ அதிகாரம் உள்ள நாடுகளே செய்யலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

பொறுப்புக்கூரல் மற்றும் இடைக்கால நீதிக்கு அரசாங்கம் உறுதிபூண்டிருப்பதாகக் கூறினாலும், பிரித்தானியா தொடர்ந்து, இலங்கை அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

அதன்பிரகாரம் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல்கள் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் விசாரித்து வழக்குத் தாக்கல் செய்ய இலங்கை அரசாங்கத்திற்கு பிரித்தானியா தொடர்ந்தும் அழைப்பு விடுக்கும் என்றும் அறிவித்துள்ளது.

மேலும் இலங்கையில் நிகழும் அனைத்து மீறல்கள் மற்றும் முறைகேடுகளுக்கும் ஒரு விரிவான பொறுப்புக்கூறல் செயல்முறையின் முக்கியத்துவத்தை பிரித்தானியா வலியுறுத்தும் என்றும் அறிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.