உள்நோக்கங்களால் பிசுபிசுத்துப் போகும் ஐ.நா. தீர்மானம்! – தமிழர்கள் பேர பலத்தை அதிகரிப்பதே ஒரே வழி

இலங்கை அமைச்சரவை கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையத்தை நிர்மாணிக்கும் வேலைகளை இந்தியா மற்றும் ஜப்பானிய நிறுவனங்களிடம் வழங்குவதற்கு இம்மாதம் முதலாம் திகதி ஒப்புதல் வழங்கியுள்ளது. ஏற்கனவே 2018ஆம் ஆண்டு, முன்னர் இருந்த அரசாங்கம் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை நிர்மாணிக்கும் வேலைகளை இந்திய மற்றும் ஜப்பானிய நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு ஒப்புக்கொண்டது.

ஆனால், ராஜபக்ஷக்கள் அந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. கடந்த சில மாதங்களாக அவர்கள் கிழக்கு முனையமா, மேற்கு முனையமா என்று மாறிமாறி அறிக்கைகளை விட்டார்கள். பொறுப்புமிக்க அமைச்சர்களே இதுதொடர்பாக மாறிமாறிக் கதைத்தார்கள். முடிவில் கடந்த கிழமை மேற்கு முனையத்தை வழங்குவது என்று அமைச்சரவை ஒப்புக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்தியா இது தொடர்பாக தனது முடிவை இன்னமும் தீர்க்கமாகத் தெரிவிக்கவில்லை.

இதே காலப்பகுதியில் இந்தியா சம்பந்தப்பட்ட வேறொரு விடயத்துக்கும் அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அதுஎன்னவெனில், இந்தியா, மாலைதீவுகள், இலங்கை ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்து பாதுகாப்புத் தொடர்பான ஒரு முக்கூட்டு பாதுகாப்புச் செயலணியை அமைப்பதற்கு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதற்குரிய பேச்சுவார்த்தைகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்தன. அப்போது, இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் இதுதொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். இதன்படி, இந்தியா-இலங்கை-மாலைதீவுகள் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து ஒரு முக்கூட்டு கடல்சார் பாதுகாப்பு பொறிமுறை ஒன்றை உருவாக்குவது என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆனால், இந்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த ராஜபக்ஷக்கள் கடந்த மூன்று மாதங்களாக இழுத்தடித்து கடந்த வாரம்தான் அதற்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறார்கள். இந்த உடன்படிக்கையானது இந்து சமுத்திரத்தில் சீனாவின் பட்டியும் பாதையும் திட்டத்திற்கு எதிரான ஒரு இந்திய வியூகம் என்பது எல்லாருக்கும் தெரியும்.

எனவே, சீனா அதற்கு எதிர்ப்புக் காட்டிய காரணத்தால் ராஜபக்ஷக்கள் அதை கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் இழுத்தடித்தார்கள். முடிவில் கடந்த வாரம் அப்படி ஒரு முக்கூட்டு கடல்சார் பாதுகாப்புச் செயலணி உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருகிறது.

கடந்த கிழமை ஸ்ரீலங்கா வான்படை அதன் 70ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியவேளை அதில், இந்திய வான்படை விமானங்கள் சாகசங்களை நிகழ்த்திய ஒரு பின்னணியில் அந்த அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. இவ்வாறு, கடந்த கிழமை மட்டும் இந்தியாவை சந்தோசப்படுத்தும் இரண்டு முக்கிய முடிவுகளை இலங்கை அரசாங்கம் எடுத்திருக்கிறது.

எனினும், இந்தியாவை எரிச்சலூட்டும் வேறு சில விவகாரங்களிலும் அவர்கள் முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக திருகோணமலையில் அமைந்திருக்கும் எண்ணெய் தாங்கிகளின் விடயத்திலும் யாழ்ப்பாணத்தின் தீவுகளில் மீளப் பயன்படுத்தும் எரிசக்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு இக்கட்டுரை எழுதப்படும் இந்நாள் வரையிலும் துலக்கமான பதில் எதையும் வழங்கியிருக்கவில்லை.

கடந்த சில மாதங்களாக இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு மிக்க அமைச்சர்களும் அதிகாரிகளும் இந்தியா சம்பந்தப்பட்ட இரு நாடுகளுக்கும் இடையிலான மேற்கண்ட விடயங்கள் தொடர்பாகத் தெரிவித்துவரும் கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது.

பொறுப்புமிக்க அமைச்சர்களே குழப்பிக் குழப்பிக் கதைக்கிறார்கள். அரசாங்கமும் அமைச்சரவையும் மாறிமாறி முடிவுகளை எடுக்கின்றன. இந்தக் குழப்பம் அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான தடுமாற்றத்தின் விளைவு என்று யாரும் அதிகம் ஆழமாக யோசிக்கத் தேவையில்லை. இது அரசாங்கம் திட்டமிட்டு வெளிக்காட்டும் ஒரு குழப்பமே. இதன்மூலம், இலங்கை அரசாங்கம் தனது பேரத்தை உயர்த்த முயல்கிறதா?

இதில், இரண்டு விடயங்களுக்கு இலங்கை அரசாங்கம் கடந்த கிழமை தீர்வு கண்டிருக்கிறது. அவ்வாறு தீர்வு காணப்பட்ட காலகட்டம் எதுவென்பது இங்கு மிகவும் முக்கியமானது. ஜெனிவா கூட்டத்தொடர் தொடங்கியிருக்கும் பின்னணியில் கூட்டத்தொடரில் இலங்கையை ஆதரிக்குமாறு ஜனாதிபதி கோட்டபாய அனுப்பிய கடிதத்துக்கு இந்தியா இன்று வரையிலும் பதில் கூறாத ஒரு பின்னணியில் இந்தியா கடந்த முறைகளைப் போலவே இம்முறையும் பெரும்பாலும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது என்று எதிர்பார்க்கப்படும் ஒரு பின்னணியில் இந்த இரண்டு விடயங்கள் தொடர்பான அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. எனவே, இது மிகத் தெளிவாகத் தெரியும் ஒரு ஜெனிவா பேரம்தான்.

இந்தியாவோடு மட்டுமல்லாது, எண்ணெய் வள நாடுகளோடும் அரசாங்கம் அப்படியொரு பேரத்துக்குச் சென்றது. கடந்த கிழமைக்கு முதற்கிழமை பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான்கான் இலங்கைக்கு வந்திருந்தார். இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று அவர் வந்திருந்தார். அவரை அழைத்ததன் நோக்கம் எண்ணெய் வள நாடுகளை அவர் மூலமாக எப்படி ஜெனிவாவில் வென்றெடுக்கலாம் என்ற பேரம்தான். இந்தப் பேரத்துக்குக்கு அரசாங்கம் பயன்படுத்திய கருவி எது தெரியுமா?

இலங்கைத் தீவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இறக்கும் முஸ்லிம்களின் ஜனாசாதான். அதாவது, முஸ்லிம்களின் ஜனாசாக்களை முன்வைத்து பேரம் பேசப்பட்டிருக்கிறது. முஸ்லிம்களின் ஜனாசாக்களைப் புதைப்பதற்கு தாம் அனுமதி வழங்குவதாகவும் அதைவைத்து எண்ணெய் வள நாடுகளோடு தமக்குச் சார்பாக இம்ரான்கான் பேரம் பேசவேண்டும் என்றும் அரசாங்கம் கேட்டதாக ஒரு தகவல் உண்டு.

இங்கு ஒரு முக்கியமான விடயத்தை நாம் கவனிக்க வேண்டும், ஐரோப்பிய – அமெரிக்க நாடுகளில் கொரோனா தொற்றினால் இறந்து போனவர்களின் உடல்களைப் புதைப்பது வழமை. விஞ்ஞானம் மிக வளர்ச்சியடைந்த அந்நாடுகளில் நோய்த் தொற்றினால் இறந்தவர்களின் உடல்களை எரிக்கவேண்டும் என்று யாரும் கேட்கவில்லை.

உலகின் மிக நாகரிகமடைந்த நாடுகள், பலம்பொருந்திய நாடுகள் பின்பற்றும் ஒரு வழமையை குட்டி இலங்கைத்தீவு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அதற்கு ஏதேதோ தர்க்கங்களை முன்வைக்கின்றது. அதற்கவர்கள் எப்படிப்பட்ட விளக்கங்களை வழங்கினாலும் அவர்களுடைய உண்மையான நோக்கம் சிங்கள-பௌத்த வாக்காளர்களைத் திருப்திப்படுத்துவதே என்பது புத்திசாலித்தனமாக யோசிக்கும் எல்லாருக்கும் விளங்கும்.

ஜனாசாக்களைப் பலவந்தமாக எரிப்பது என்பது ஒரு கூட்டு உரிமை மீறல். ஒரு பண்பாட்டு உரிமை மீறல். இவ்வாறு தமது நாட்டின் பிரஜைகள் ஒரு பகுதியினரின் பண்பாட்டு உரிமையை மீறும் ஓர் அரசாங்கம் அந்த உரிமை மீறலைக் கைவிடுவதற்கு எண்ணெய் வள நாடுகளிடம் பேரம் பேசுகிறது. ஜெனிவாவில் தன்னை ஆதரிக்க வேண்டும் என்று பேரம் பேசுகிறது. எப்படி இருக்கிறது? ஒரு உரிமை மீறலைக் கைவிடுவதற்கு ஒரு பேரம்?

இவ்வாறு கடந்த கிழமைகள் முழுவதும் அரசாங்கம் ஜெனிவாவை நோக்கிப் பேரக் காய்களை நகர்த்தி வருகிறது. கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி மனித உரிமைகள் பேரவையில் மொத்தம் 47 நாடுகளில் இதுவரையிலும் பத்து நாடுகளே அரசாங்கத்துக்கு ஆதரவாகக் காணப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அரசாங்கம் இதை ஒரு மானப் பிரச்சனையாகப் பார்க்கிறது. அதே சமயம், இதுவும் அவர்களுக்கு சிங்கள-பௌத்த வாக்காளர்களை தமது பிடிக்குள் வைத்திருக்க உதவும்.

நாட்டின் வெளியுறவுச் செயலாளராக இருப்பவர் ஒரு ஓய்வுபெற்ற அட்மிரல். அவர் படைத்துறைப் பாணியிலேயே பேசுகிறார். சரணடைய மாட்டோம் இறுதிவரை போராடுவோம் என்று கூறுகிறார். அல்லது துப்பாக்கியை நெற்றியில் வைத்துக்கொண்டு சமரசத்துக்கு வா என்று அழைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறுகிறார்.

இத்தனைக்கும் சீனா ஜெனிவாவில் தெளிவாக அரசாங்கத்தின் பக்கம் நிற்கிறது. அது இம்முறை ஜெனிவாவில் அரசாங்கத்தின் பேரபலத்தை அதிகப்படுத்தியுள்ளது. எப்படியென்றால் அரசாங்கத்தோடு சீனா நிற்பதனால் சீனாவுக்கு ஆதரவான நாடுகள் அரசாங்கத்தோடு நிற்கும். அல்லது சில நாடுகளை சீனா அரசாங்கத்திற்காக வென்றெடுத்துக் கொடுக்கும். இது முதலாவது.

இரண்டாவது- அமெரிக்காவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் எதிரான நாடுகளும் ஜெனிவாவில் அரசாங்கத்தை ஆதரிக்கும். உதாரணமாக, கியூபா போன்ற நாடுகள். கடந்த ஜெனிவா கூட்டத்தொடர்களின் போதும் இது நடந்திருக்கிறது.

மூன்றாவது- சீனாவின் பக்கம் நிற்கும் இலங்கை தீவை எப்படி நயத்தாலும் பயத்தாலும் வென்றெடுக்கலாம் என்று அமெரிக்காவும் இந்தியாவும் மேற்கு நாடுகளும் சிந்திக்கின்றன. இலங்கைத் தீவின் மீது புதிதாக அழுத்தங்களைப் பிரயோகித்தால் அது இலங்கை தீவை முழுவதுமாக சீனாவின் கைகளில் கொடுப்பதாக அமைந்து விடலாம் என்ற பயம் அவர்களிடம் உண்டு. எனவே, இலங்கை தீவை சீனாவை நோக்கி உந்தித்தள்ளாத விதத்தில் எப்படி ஐ.நா. தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்யலாம் என்றே அவர்கள்  சிந்திக்கின்றனர். இம்முறை தீர்மானத்துக்கான பூச்சிய வரைபும் அதன் திருத்தப்பட்ட வரைபு என்ற பெயரில் நேற்று முன்தினம் வெளிவந்த ஒரு வரைபும் அதைத்தான் காட்டுகின்றன.

எனவே, மேற்கண்ட அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது, மேற்கு நாடுகளும் இந்தியாவும் சரி, பாகிஸ்தானும் சரி, ஏனைய நாடுகளும் சரி தமிழ் மக்களின் உரிமைகளை, தமிழ் மக்களுக்குரிய நீதியை பெற்றுக் கொடுக்கப் போவதாக வெளிப்படையாக கூறிக்கொண்டாலும் உள்ளோட்டங்களைப் பொறுத்தவரை எல்லா நாடுகளுமே தங்களுடைய பிராந்திய, பூகோளப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்தே சிந்திக்கின்றன.

அதற்கு, தமிழ் மக்களின் விவகாரம் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதே மெய்நிலை. எனவே, ஜெனிவாவை நீதிமன்றமாகக் கருதி ஜெனீவாவில் நீதி கிடைக்கும் என்று நம்பி ஜெனிவாவுக்காக காத்திருப்பதில் இருந்து தமிழ் மக்கள் முதலில் விடுபட வேண்டும்.

தமது பேரபலத்தை உள்நாட்டிலும் வெளியரங்கிலும் எப்படி அதிகப்படுத்தலாம் என்று சிந்தித்து அதற்குரிய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். தன்பலம் இன்றி வெளியாருக்காக காத்திருப்பது என்பது தமிழ் மக்களை சக்திமிக்க நாடுகள் கறிவேப்பிலை போலப் பயன்படுத்திவிட்டு இறுதியிலும் இறுதியாகக் கைவிடும் ஒரு நிலைமைக்கே இட்டுச் செல்லும்.