இலங்கையை மீது தீவிர கண்காணிப்பில் கனேடிய தூதுவர்-சூடுபிடிக்கும் ஐ.நா விவகாரம்

ஐ.நா விவகாரமானது சூடுபிடிக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினொன் ஆங்கில ஊடகமொன்றின் செய்தியை மேற்கோள்காட்டி டுவிட்டர் பதிவொன்றை இட்டுள்ளார்.

குறித்த டுவிட்டர் பதிவில் ‘இலங்கையில் வலுவான கண்காணிப்பின் கீழ் நான் உள்ளேனா?’ என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

கொழும்பின் பிரபல ஆங்கில நாளிதழொன்றில் கடந்த சனிக்கிழமை வெளியான செய்தியை மேற்கோள் காண்பித்து, அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நிலையில் அவர் மேற்கோள் காட்டியுள்ள குறித்த செய்தியில், இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்டிருக்கும் தீர்மானத்திற்கு ஏனைய உறுப்பு நாடுகள் ஆதரவு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினொன் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் அரிஃபுல் இஸ்லாமுடன் சந்திப்பொன்றை நிகழ்த்தியதை சுட்டிக்காட்டி, அவ்விரு நாடுகளின் இராஜதந்திரிகளுக்கும் இடையில் சந்திப்பு நிகழ்வது மிகவும் அரிதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பங்களாதேஷ் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஓர் உறுப்பு நாடாக இருக்கிறது. அண்மையில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தென்கொரிய தூதுவர் வூன்ஜின் ஜியோங்கை சந்தித்திருந்தார். இதனை தொடர்ந்து குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது என மேற்கோள் காட்டப்பட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்தே இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இந்த செய்தியினை மேற்கோள் காட்டி குறித்த பதிவினை இட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.