மணல் அகழ்விற்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மன்னார் நீதிமன்றத்தால் தள்ளுபடி

மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக சட்ட விரோத மணல் அகழ்வுகள் மற்றும் ஒழுங்கமைக்கப்படாத மணல் அனுமதிகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் பிரதேச மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மக்களாலும் பிரதேச சபை உறுப்பினர்களாலும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் மாவட்ட ஒருங்கிணப்பு குழுவினால் அனைத்து வித மணல் அகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டதுடன், மணல் அகழ்வு தொடர்பாக ஒழுங்கமைக்கப்பட்டதன்  பின்னர் அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் நானாட்டன் பிரதேச சபை உறுப்பினரும், திடீர் மரண விசாரணை அதிகாரியுமான  றொஜன் ஸ்ராலின் தனக்கு வழங்கப்பட்ட மணல் அகழ்வுக்கான அனுமதி புதுபிக்கப்படவில்லையெனவும் அரச அதிகாரிகள் தங்கள் பணியை ஒழுங்காக மேற்கொள்ளவில்லை எனவும் கோரி மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

 

குறித்த வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது நானாட்டான் பிரதேச  சபையின் தவிசாளர், நானாட்டன் பிரதேச செயலாளர், மற்றும் சுரங்கம் மற்றும் அகழ்வுக்கு பொறுப்பான அதிகாரி மீது வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில் விசாரணை இடம்பெற்றது.

இருப்பினும் குறித்த வழக்கை விசாரிப்பதற்கு நீதவான் நீதி மன்றத்திற்கு நியாயாதிக்கம் இல்லையெனவும் நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் மக்கள் பிரதி நிதி என்ற அடிப்படையில் அவர் அரச பணியை செய்யவில்லை என கோர முடியாது எனவும்,  குறித்த வழக்கு அடிப்படை அற்றது எனவும் இதை மீளப்பெற்றுக் கொள்ளுமாறும் நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் வாதத்தை முன் வைத்தனர்.