ஜெனிவா தீர்மானங்களுக்கு அடிபணியாமல் அச்சமின்றி முகங்கொடுப்போம்- கோட்டாபய

ஜெனிவா அழுத்தத்திற்கு அடிபணியாமல் அச்சமின்றி அதற்கு முகங்கொடுப்போம்.  இலங்கை ஒரு சுதந்திர நாடாகும். எனவே, இந்து சமுத்திர  அதிகாரப் போராட்டத்திற்கு நாம் பலியாக மாட்டோம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் சமர்பிக்கப்பட்ட பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்குமளவிற்கு கடந்த ஆட்சியில் நாட்டின் இறையான்மை பலவீனமடைந்திருந்தது.

அத்தோடு மில்லேனியம் சவால் (எம்.சி.சி.) ஒப்பந்தம் மற்றும் கொழும்புதுறைமுக கிழக்கு முனைய விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை தோற்றுவித்த கடந்த ஆட்சியாளர்களே தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபடுகின்றனர் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

 

மாத்தறை மாவட்டத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற ‘கிராமத்துடன் உரையாடல்’ நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி ,

நீண்ட காலமாக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சரியாக அடையாளம் கண்டு தீர்ப்பதன் மூலம், நாட்டை  முன்னோக்கி கொண்டு செல்வதற்கான அடிப்படை அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்குவது அரசாங்கத்தின் கடப்பாடாகும். இது அரசாங்கத்தைப் போன்றே அதிகாரிகளுடைய பொறுப்பாகவும் இருக்கின்றது.

நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் பயனுள்ள முறையில் வலுப்படுத்தும் அதேவேளை, கிராமப்புற மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

அன்று கொழும்பு நகரம் பசுமை நகரமாக உருவாக்கப்பட்டது. 2030 ஆம் ஆண்டளவில் 70 வீத சக்தி வளத் தேவைகள் மீள்பிறப்பாக்க மூலங்களிலிருந்து உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

7000 க்கும் மேற்பட்ட சூரிய சக்தி அமைப்புகளிலிருந்து பிரதான மின் கட்டத்திற்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரசாயன உரங்களின் பயன்பாடு ஒவ்வொரு ஆண்டும் 25 வீதமாகக் குறைக்கப்படுகிறது.

இவை அனைத்தும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு பொருளாதாரத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டங்கள்.

இந்த முன்னேற்றங்களை சகித்துக்கொள்ளமுடியாத உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளும் அவர்களுக்கு ஆதரவளிக்கும் குழுக்களும் பொய்களை உருவாக்கி மக்களை தவறாக வழிநடத்துகின்றன.

உண்மையை அறியாமல் தவறான பிரசாரங்களால் மக்கள் ஏமாற்றமடைந்தால், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட சேதம் மீண்டும் நிகழலாம். அவ்வாறு இடம்பெற்றால் அந்த சேதத்தை சரிசெய்வது எளிதானதல்ல.

கடந்த அரசாங்கத்தின் முட்டாள் தனமான நடவடிக்கைகளால் தேசிய பாதுகாப்பு வீழ்ச்சியடைந்தது. அதன் விளைவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதலாகும்.

ஆதாரமற்ற குற்றச்சாட்டில் படைவீரர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜெனீவா தீர்மானத்திற்கு இணை அனுசரணை அளிக்கும் அளவுக்கு நாட்டின் இறையாண்மை பலவீனமடைந்திருந்தது.

எம்.சி.சி ஒப்பந்தம் மற்றும் கிழக்கு முனையம் போன்ற ஒப்பந்தங்களால் நாடு பெரும் நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேர்ந்தது. எனினும் அவற்றுக்கு எமது ஆட்சியில் தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அனைத்து பிரச்சினைகளையும் உருவாக்கி அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களே தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கின்றனர்.

கடந்த அரசாங்கத்தின் பிரபலமானவர்கள் ஒருபோதும் ஆட்சியில் இல்லாததைப்  போல் இன்று பேசுகின்றனர். அவர்களது செயற்பாடுகளும் அவ்வாறே உள்ளன.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பற்றி பேசுவது எனது கொள்கை அல்ல என்ற போதிலும் , உண்மையை தெளிவுபடுத்துவதற்காக அவற்றுக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது என்று  கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.