பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களிடம்-கோவிட்19 கண்டு பிட்டிக்க முக்கிய கோரிக்கை

மேல் மாகாணத்தில் சகல வகுப்பு மாணவர்களுக்கும் பாடசாலைகள் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் மாணவர்களின் பெற்றோரிடம் முக்கிய கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கோவிட் தொற்று குறித்த எந்தவொரு சந்தேகத்திற்கிடமான அறிகுறிகளும் அற்ற மாணவர்களை மாத்திரம் பாடசாலைக்கு அனுப்புமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேல் மாகாணத்தில் சகல பாடசாலைகளும் இன்று முழுமையாக திறக்கப்பட்டுள்ள நிலையில், பொது சுகாதார பரிசோதகர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பில் தெளிவுபடுத்துகையில் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

சகல பிரதேங்களிலும் உள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் அவர்களின் பொறுப்பின் கீழுள்ள பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கண்காணித்துள்ளனர்.

எவ்வாறிருப்பினும், கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபத்திற்கு அமைய மாணவர்களை எவ்வாறு பாடசாலைக்கு அனுப்ப வேண்டும் என்பது தொடர்பில் பெற்றோர் விசேட அவதானம் செலுத்த வேண்டும்.

எனவே, எந்தவொரு சந்தேகத்திற்கிடமான அறிகுறிகள் அற்ற மாணவர்களை மாத்திரம் பாடசாலைக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பும்போது அவர்களுக்கென பிரத்தியேகமான தண்ணீர் போத்தல் உள்ளிட்டவற்றை பெற்றோர் வழங்க வேண்டும்.

குறிப்பாக மாணவர்களின் போக்குவரத்து தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும்.

பாடசாலைகளிலும், வீடுகளிலும் மாணவர்கள் மிகவும் பாதுகாப்பாக காணப்பட்டாலும் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது அவை கேள்விக்குறியாகின்றன. இது கவலைக்குரியதாகும்.

பாடசாலை நிர்வாகம் மற்றும் அதிபர்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும். எவ்வாறிருப்பினும், பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிமுறைகளுக்கமைய சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதால் பெற்றோர் அல்லது மாணவர்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை.

இதேவேளை பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டள்ள நிலையில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் பொது சுகாதார பரிசோதகர்கள் துரிதமாக செயற்பட்டு கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சிற்கு அறிவிப்பார்கள் என கூறியுள்ளார்.