யாழ், கிளிநொச்சி மாவட்டங்களுக்கு ‘கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம்

    இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கமைய, ஜனாதிபதி செயலணியின் ஒப்புதலின் கீழ், பிரதமர் அலுவலகத்தின் ஊடாக செயற்படுத்தப்படும் ‘கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்தின்’ மற்றுமொரு கட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் யாழ். மாவட்ட செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

    ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தில் குறிப்பிடப்பட்டதற்கமைய தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் அடிப்படையில் சுபீட்சமான தேசத்தை கட்டியெழுப்புவதற்கு அரச பொறிமுறையை கிராமத்தை நோக்கி கொண்டு செல்வது இவ்வேலைத்திட்டத்தின் அடிப்படையாகும்.

    அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் கூடிய ‘சமூக உட்கட்டமைப்பு குழு’வினால் யாழ்., கிளிநொச்சி ஆகிய இரு மாவட்டங்களுக்கான அமைச்சினால் எதிர்வரும் ஆண்டில் செயற்படுத்தப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. அதிகாரிகளினால் மாவட்டத்திற்குள் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட அமைச்சுக்களினால் அப்பிரச்சினைகள் தொடர்பில் அச்சந்தர்ப்பத்தில் பதிலளிக்கப்பட்டது.

    கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு மைதானத்தின் பணிகளை வெகு விரைவில் பூர்த்தி செய்வதாக அச்சந்தர்ப்பத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதலளித்த அமைச்சர், கட்டுமான பணிகள் பூர்த்தி செய்யப்படாத அனைத்து விளையாட்டு மைதானங்களினதும் பணிகள் எதிர்வரும் சில வருடங்களுக்குள் நிறைவுசெய்யப்பட்டு வீர, வீராங்கனைகளிடம் கையளிக்கப்படும் என தெரிவித்தார்.

    நாட்டில் பேரழிவாக விளங்கும் போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞர்களுக்கான புனர்வாழ்வு நிலையமொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த அமைச்சர், இளைஞர் யுவதிகளுக்கான பல்நோக்கு இளைஞர் நிலையமொன்றை நிறுவுவதற்கான வேலைத்திட்டமொன்று செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

    குறித்த நிலையத்தினுள் வெளிப்புற உடற்பயிற்சி பிரிவு, ஒரு நடை பாதை, இணைய அணுகல் கொண்ட கணினி பிரிவு என்பன உள்ளடக்கப்படுவதுடன், உணவகம் போன்ற வசதிகள் கொண்ட முழு குடும்பமும் ஒன்றாக விளையாட்டுகளில் ஈடுபடக்கூடிய, அமைதியாக தங்களது நேரத்தை செலவிடக்கூடிய வகையில் இந்நிலையம் அமையும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன், இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாவதை தடுப்பதற்கும், குடும்ப நல்லிணக்கத்தை மேம்படுத்தவும், தினசரி உடற்பயிற்சி மூலம் உடல் ஆரோக்கியத்தை பேணவும் உதவும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

    குறித்த சந்தர்ப்பத்தில் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி. பீ.எச.எம்.சார்ள்ஸ், யாழ். மாவட்ட செயலாளர் திரு. கே.மகேசன், கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கௌரவ இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவண்ண, பிரியங்கர ஜயரத்ன, பியல் நிசாந்த, சிசிர ஜயகோடி, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், சி.வி.விக்னேஸ்வரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுப்பிரமணியம் ஸ்ரீதரன், எம்.ஏ.சுமந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.