இரண்டாக பிளவடைந்து கடலுக்குள் மூழ்கும் அபாயத்தை எஸ்க்பிரஸ் பேர்ல் கப்பல் கடந்துள்ளது

கொழும்பு துறைமுகத்தின்  கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ள எம். வி.எக்ஷ்பிரஸ் பேர்ல் சரக்கு  கப்பலில் ஏற்பட்ட தீ தற்போது ஓரளவிற்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தீ பரவலினால் இரண்டாக பிளவடைந்து கடலுக்குள் மூழ்கும் அபாயத்தை கப்பல் கடந்துள்ளது என  கடற்படை தளபதி வய்ஸ் அடமிரல் நிஷாந்த உழுகேதென்ன தெரிவித்தார்.

 

அவர் மேலும் குறிப்பிடுகையில், எம்.வி  எக்ஷ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்டுள்ள தீ பரவலை முற்றாக அழிக்கவும், சமுத்திர சூழலை பாதுகாக்கவும் இலங்கை  மற்றும் இந்திய கடற்படையின் கூட்டு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரகாலமாக கப்பலில் ஏறப்பட்டுள்ள தீ பரவலை கட்டுப்படுத்த அனைத்து தரப்பினரது ஒத்துழைப்பும் முழுமையாக பெற்றுக் கொள்ளப்பட்டன.

நேற்றுமாலை  கப்பலின் பின்புறத்தில் தீ பரவலை அவதானிக்க முடிந்தது. கப்பலின் நடுப்பகுதியில்  வெறும் புகைமூட்டம் மாத்திரம் காணப்பட்டது. சீரற்ற காலநிலை காரணமாகவே தீ வெகுவாக பரவலடைந்தது. ஆகவே  தற்போது  தீ ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே   கப்பல் இரண்டாக பிளவடைந்து கடலுக்குள்  மூழ்கும் அபாயத்தை கடந்துள்ளது என்றார்.

மேலும், கடற்கரையோர பாதுகாப்பினை உறுதிப்படுத்த  கடற்படையினர் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளார்கள். தீ பரவியுள்ள கப்பலில் இருந்து கடலுக்குள் வீழ்ந்துள்ள பொருட்கள் காற்றின் வேகத்திற்கு ஏற்ப நாட்டின் எத்திசையிலும் கரையொதுங்கலாம். ஆகவே கடலில் மிதந்து வரும்  பொருட்களையும், கரையொதுங்கியுள்ள பொருட்களையும்  தொட வேண்டாம் என  அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே பொது மக்கள் பொறுப்புடன் செயற்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.