தமிழர் பகுதியில் செல்வந்தர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் காணிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட மயிலம்பாவெளியில் காணியற்ற மக்கள் அருகில் உள்ள சவுக்கடி பகுதியில் அரச காணியில் குடியேற முற்பட்டபோது குறித்த நடவடிக்கைகள் பிரதேச செயலாளர்களினால் தடுத்து நிறுத்தப்பட்டதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை குறித்த பகுதி மக்களின் கோரிக்கைக்கு அமைவாக ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளர் சி.சர்வானந்தன் அப்பகுதிக்குச் சென்று அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது பிரதேச மக்கள் தெரிவிக்கையில்,

குறித்த பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காணியற்ற நிலையில் உள்ளதாகவும், நீண்டகாலமாக தங்களுக்குக் காணி வழங்குமாறு கோரிய நிலையில் இதுவரையில் எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

இது தொடர்பில் அரசியல்வாதிகள், இராஜாங்க அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டுசென்ற நிலையில் தீர்வு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அரச காணியைத் தூய்மைப்படுத்திக் குறித்த பகுதிகளைச் சேர்ந்த காணிகள் அற்றவர்கள் குடியேற முனைந்தபோது பிரதேச செயலகத்தினால் தங்களை அப்பகுதியிலிருந்து செல்லுமாறு பொலிஸாரைக் கொண்டு விரட்டினர்.

குறித்த பகுதி ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியாகவுள்ள நிலையில் மட்டக்களப்பு-மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்க்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு, ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளர் சி.சர்வானந்தன்,

காணிகளற்ற மக்களுக்குக் காணிகளைப் பகிர்ந்தளிக்காமல் செல்வந்தர்களுக்கு இப்பகுதிகளில் காணிகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன.

செல்வந்தர்கள் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளை அபகரிக்கும்போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இருக்க இடமின்றி பெருமளவான தமிழ் மக்கள் வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery