கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சித்திரவதை? ம.உ.மு.ஆணைக்குழு விசாரணை

இளைஞன் ஒருவரும், அவரது சகோதரியும் கோப்பாய் பொலிஸார் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக மனிதவுரிமை ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான இளைஞன் ஒருவர் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்துள்ளார்.

இளைஞனின் வீடு, அவரது சகோதரி வீடு என்பவற்றுக்கு சென்று பொலிஸார் தேடுதல்கள் நடத்தியதுடன், அவர்களின் அன்றாட வாழ்விற்கும் இடையூறு விளைவித்துள்ளனர். இந்நிலையில் வீட்டார் குறித்த இளைஞனை கடந்த 24ஆம் திகதி கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு 24 மணி நேரம் கடந்தும் இளைஞனை நீதிமன்றில் முற்படுத்தவில்லை எனவும் , தமக்கும் இளைஞனை காட்டவில்லை எனவும், இளைஞனை தடுத்து வைத்து சித்திரவதைக்கு உட்படுத்துவதாகவும், வீட்டாரால் மனிதவுரிமை ஆணைக்குழுவின், யாழ்.மாவட்ட பிராந்திய அலுவலகருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் அடிப்படையில் மனிதவுரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் விசாரணைகளை ஆரம்பித்த போது, பொலிஸார் 25ஆம் திகதி மாலை யாழ்ப்பாண நீதவான் முன்னிலையில் முற்படுத்தினர்.

அதேவேளை விசாரணைகளை ஆரம்பித்த இணைப்பாளர், குறித்த இளைஞனை, சட்ட வைத்திய அதிகாரியின் முன் முற்படுத்தி அறிக்கை பெறுமாறும், அத்துடன் யாழ்.பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரிடம் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து தமக்கு அறிக்கை சமர்பிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் குறித்த இளைஞனின் சகோதரியை கோப்பாய் பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்து சித்திரவதை புரிந்ததாக வீட்டாரால் நேற்றைய தினம் மனிதவுரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளருக்கு எழுத்து மூல முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது, அது தொடர்பிலும் விசாரணைகளை இணைப்பாளர் ஆரம்பித்துள்ளார்.