பௌத்த சிந்தனைகளை கூறி ஆட்சிபீடமேறியவர்கள், இன்று சுற்றுச்சூழலை முழுமையாக அழித்துக்கொண்டிருக்கிறார்கள்: ஐ.தே.க

கௌதம புத்தரின் போதனைகளை அடிப்படையாகக் கொண்ட நாட்டில் ‘ஒட்சிசனை வைத்து என்ன செய்வது?’ என்று கேட்கும் அரசியல்வாதிகள் உருவாகியிருப்பது கவலைக்குரிய விடயமாகும். பௌத்த சிந்தனைகளை வைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு ஆட்சிபீடமேறியவர்கள் இப்போது சுற்றுச்சூழலை முழுமையாக அழித்துக்கொண்டிருக்கிறார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர்  கடுமையாகச் சாடியுள்ளார்.

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள காணொளியிலேயே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

கௌதம புத்தர் தான் இந்த உலகில் தோன்றிய குறிப்பிட்டுக்கூறத்தக்க சூழலியலாளராவார். கௌதம புத்தர் சூழலைப் பாதுகாத்ததுடன் அது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தினார். சூழல் இல்லாமல்  உயிரினங்களுக்கு வாழ்க்கை இல்லை என்று அவர் போதனை செய்தார். பௌத்த தர்மம் அனைத்து உயிர்களையும் மையப்படுத்தியதாகவே அமைந்துள்ளது.

அத்தகைய அடிப்படைப் பின்னணியொன்றைக் கொண்ட நாட்டில் இப்போது ‘ஒட்சிசனை சாப்பிட முடியுமா?’ என்று கேட்கின்ற அரசியல்வாதிகள் உருவாகியிருக்கிறார்கள். காடுகளையும் மரங்களையும் பாதுகாப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்போது, அவர்களிடம் ‘ஒட்சிசனை வைத்து என்ன செய்வது?’ என்று அரசியல்வாதிகள் கேள்வி எழுப்புகின்றார்கள்.

அதேபோன்று பல்வேறு இராசாயனப்பொருட்களைக் கொண்ட கப்பலை இலங்கைக் கடற்பரப்பிற்குள் கொண்டுவந்து, சூழலை முழுமையாக நாசமாக்கியிருக்கிறார்கள். கௌதம புத்தரின் போதனைகளையும் பௌத்தர்கள் என்ற சிந்தனையையும் தேர்தல் பிரசாரங்களில் மீண்டும் மீண்டும் கூறி ஆட்சிபீடமேறியவர்கள், இப்போது அவரது போதனைகளுக்கு எதிராக சுற்றுச்சூழலை அழித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று சாடியுள்ளார்.