அரசியல் கைதிகள் விடுதலையாகியென்ற வார்த்தையை பயன்படுத்த மாட்டேன்! அருட்தந்தை மா.சத்திவேல்

நாங்கள் தேசியம் பேசுகின்றோம். ஆனால் எங்களுடைய தேசியத்துக்கு முன்னின்றவர்களை சமூகத்தில் ஏற்றுக் கொள்வதற்கு எந்த விதமான செயற்பாடுகளும், அமைப்புகளும் இல்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளின் தற்போதைய நிலவரம் குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியல் கைதிகள் விடுதலையாகி (விடுதலையாகி என்ற வார்த்தையை நான் பயன்படுத்த மாட்டேன்.) நீதிமன்ற செயற்பாட்டுக்கு ஊடாக ஒரு சிலர் குற்றங்கள் செய்யவில்லை என முழுமையாக வெளியே வந்து கொண்டிருக்கின்றார்கள்.

குற்றங்கள் புரிந்தவர்கள் என்ற அடிப்படையிலே நீதிமன்றம் அவர்களுக்குத் தண்டனை கொடுத்து – புனர்வாழ்வு கொடுத்து அவர்களை சமூகத்தில் இணைத்திருக்கின்றது. அவர்களை ஏற்றுக் கொள்வதற்கு , வரவேற்பதற்கு எந்த ஆயத்தங்களையும் செய்யாத ஒரு தமிழ்ச் சமூகமாக இருக்கின்றோம்.

இந்த நிலையிலே சமூகமயப்படுத்தல் என்று கூறுகின்ற போது, சிறையிலிருந்து வந்தவர்களும் கூட தனித்தனி நபர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களை ஒழுங்கமைப்பதில் எந்தவிதமான திட்டங்களும் எங்களுக்கு இல்லை.

இதன் காரணமாக தங்களுடைய பாதுகாப்பு கருதி, தங்களுடைய நலன் கருதி, தங்களுடைய பொருளாதாரம் கருதி இவர்கள் மீண்டும் இராணுவத்திடம் புலனாய்வாளர்களாக இருக்கின்றார்கள். இராணுவ பண்ணைகளில் வேலை செய்கின்றார்கள்.

அண்மையிலே 16 பேர் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இந்த பொது மன்னிப்பை விடுதலை என ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த பொது மன்னிப்பில் வந்தவர்கள் கூட அடுத்து என்ன செய்வதென்று தெரியாத சூழ் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

எனவே இவர்களை நாங்கள் ஒருங்கிணைக்க வேண்டும் என்றால், ஒரு பாரிய அமைப்பொன்று தேவையாக இருக்கிறது. அந்த அமைப்பின் செயற்பாடுகளுக்குள்ளே நாம் போகவில்லை.

அது ஒரு பொருளாதாரம் சார்ந்த ஒன்று. பொருளாதாரத்தைப் பலப்படுத்த வேண்டும். பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்குப் புலம் பெயர் நாடுகளில் உதவிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது என தெரிவித்துள்ளார்.