கோட்டா அரசுடன் பைடன் கடும்போக்கைக் கடைப்பிடிப்பது சாத்தியமா?

பைடன் நிர்வாகம் அதன் ஜனநாயக நம்பகத்தன்மையை நிரூபிப்பதற்காக இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு குற்றங்கள் தொடர்பிலும், மற்றும் நல்லிணக்க விவகாரங்களில் அக்கறை காட்டும் என்று எதிர்பார்க்கமுடியும் என்றாலும், இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் சீனாவை கட்டுப்படுத்துவதற்கு இலங்கையின் புவிசார் மூலோபாய முக்கியத்துவம் அவசியம் என்பதால் கோத்தபாய ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராகக் கடுமையான போக்கைக் கடைப்பிடிக்கக்கூடியது சாத்தியமில்லை என்று அரசியல் அவதானிகள் அபிப்பிராயம் தெரிவித்திருக்கிறார்கள்.

காலப்போக்கில் சீனாவிற்கு எதிரான ஒரு கூட்டணியாக இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் சேர்ந்து அமெரிக்கா அமைத்திருக்கும் ‘குவாட்” அமைப்புக்குள் இலங்கையை இழுப்பதற்கு பைடன் நிர்வாகம் முயற்சிக்கக்கூடும் என்றும் அவர்கள் முன்மதிப்பீடு தெரிவித்திருக்கிறார்கள்.

இலங்கையை சீனா கடன்பொறிக்குள் தள்ளிவிடுகிறது என்று பிரசாரங்களைச் செய்வதற்குப் பதிலாக இலங்கையில் முதலீடுகளைச் செய்வதற்கு அமெரிக்கா வழிவகைகளை காணவேண்டும் என்று இருவாரங்களுக்கு முன்னர் கொழும்பு வந்திருந்த அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோவிடம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ யோசனை தெரிவித்திருந்தார். பைடன் நிர்வாகம் அந்த யோசனையை அக்கறையுடன் பரிசீலிக்கக்கூடும் என்று மூத்த அரசியல் ஆய்வாளரும் பத்திரிகையாளருமான பி.கே.பாலச்சந்திரன் கூறியிருக்கிறார்.

அமெரிக்காவின் முதலீடுகள் வரவேற்கப்படக்கூடிய துறைகள் பற்றிய பட்டியல் ஒன்றை கோத்தபாயவும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் பொம்பியோவிடம் கையளித்திருந்தனர். அமெரிக்காவை ஏனைய நாடுகளுக்கு நட்புபூர்வமானதாக்குவதற்கு பைடன் முன்னெடுக்கக்கூடிய முயற்சிகளின் ஒரு அங்கமாக ஜனநாயக நாடுகளை அரவணைத்து செல்வதில் அக்கறையுடையவராக பைடன் இருப்பதால், கோத்தபாயவுடம் தினேஷ் குணவர்தனவும் பொம்பியோவிடம் முன்வைத்த பட்டியலை அமெரிக்க புதிய நிர்வாகம் அக்கறையுடன் பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள் மீண்டும் அமெரிக்கா இணைந்துகொண்ட பிறகு மனித உரிமைகள் மற்றும் இனநல்லிணக்க விவகாரங்களில் பைடன் கொழும்புடன் கடுமையாக நடந்துகொள்ளக்கூடிய சாத்தியம் இருப்பதாக இலங்கையில் அச்சம் நிலவுகிறது. ஜனநாயகக் கட்சிக்காரர்கள் பாரம்பரியமாக மனித உரிமைகள் பிரச்சினைகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பவர்கள். இலங்கை தொடர்பில் ஒபாமா நிர்வாகம் முன்னர் அவ்வாறு நடந்துகொண்டது.

அமெரிக்க துணை ஜனாதிபதியாகத் தெரிவாகியிருக்கும் கமலா ஹரிஸின் தாயார் ஒரு சென்னை தமிழப்பெண்மணி என்பதால், அவர் தமிழ்ப் பிரிவினைவாத இலட்சியத்துக்காகக் குரல்கொடுக்கக்கூடும் என்று சிங்கள பெரும்பான்மையினர் மத்தியில் குறிப்பாக அச்சம் நிலவுகிறது. புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச்சமூகம் கமலா ஹரிஸை அணுகுவதற்கு ஏற்கனவே நாட்டம் காட்டியிருக்கிறது என்று எச்.எல்.டி.மகிந்தபால நவம்பர் 8 சண்டே ஒப்சேர்வரில் எழுதியிருக்கிறார்.

ஆனால் பைடன் நிர்வாகம் அதன் ஜனநாயக நம்பகத்தன்மையை நிரூபிப்பிதற்காக இனநல்லிணக்கப் பிரச்சினைகளை கையிலெடுப்பதில் அக்கறை காட்டக்கூடும் என்கிற அதேவேளை, இலங்கையில் அதன் செல்வாக்கை ஆழமாகப் பதித்துவிட்ட கோத்தபாய அரசாங்கத்திற்கு எதிராகக் கடுமையான போக்கை கடைப்பிடிப்பது பெரும்பாலும் சாத்தியல்லை. இந்து சமுத்திரத்தில் சீனாவைக் கட்டுப்படுத்துவதற்கான புவிசார் மூலோபாய தேவைக்கு இலங்கை அரசாங்கம் அவசியம் என்பதால் பைடன் நிர்வாகம் கடுமையான நிலைப்பாடுகளை எடுக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. காலப்போக்கில் ‘குவாட்” அமைப்புக்குள் இலங்கையைக் கொண்டுவருவதற்கு முயற்சிக்கக்கூடும்.

மீள்பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்று கோதாபய அரசாங்கம் விரும்புகிற மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் (எம்.சி.சி) உடன்படிக்கையை மீளாய்வுக்கு உட்படுத்த பைடன் இணங்கவும்கூடும் என்று பாலச்சந்திரன் கூறுகிறார்.