தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொது செயலாளர் திடீர் கைது

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொது செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் இன்றைய தினம் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆரையம்பதியில் இடம்பெற்ற இரட்டைக்கொலை தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மட்டக்களப்பு – ஆரையம்பதி பகுதியில் 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் திகதி பாடசாலை ஆசிரியரான தமிழ்நாடு என அழைக்கப்படும் கிருஸ்ணபிள்ளை மனோகரன் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக கிருஸ்ணபிள்ளை மனோகரனின் சகோதரியொருவர் காத்தான்குடி பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் ஹரன் ஆகியோர் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.