2வது டி20 போட்டியிலும் வெற்றி – இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா

முதலில் ஆடிய இந்தியா ரோகித் சர்மா, ஜடேஜா அதிரடியால் 170 ரன்களை எடுத்தது. இந்தியாவின் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட், பும்ரா, சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். பர்மிங்காம்: இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று பர்மிங்காமில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. பொறுப்புடன் ஆடிய ரவீந்திர ஜடேஜா 46 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

ரோகித் சர்மா 31 ரன்னும், ரிஷப் பண்ட் 26 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் ஜோர்டான் 4 விக்கெட், கிலீசன் 3 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. ஆரம்பம் முதலே இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி முன்னணி வீரர்களை வெளியேற்றினர்.

இதையும் படியுங்கள்: ரோகித், ஜடேஜா அசத்தல் – இங்கிலாந்து வெற்றி பெற 171 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா அந்த அணியில் அதிகபட்சமாக மொயீன் அலி 35 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர். கடைசி கட்டத்தில் டேவிட் வில்லி அதிரடியாக ஆடி 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இறுதியில், இங்கிலாந்து அணி 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியா 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை 2-0 என இந்தியா கைப்பற்றியுள்ளது. இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட், பும்ரா, சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.