ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு சம்பிக்க விடுத்துள்ள வேண்டுகோள்

புதிய ஜனாதிபதி தெரிவிற்காக போட்டியிடும் சகல வேட்பாளர்களும் தங்களின் வெற்றி குறித்து அவதானம் செலுத்தாமல் நாட்டின் எதிர்காலம் தொடர்பில் கவனம் செலுத்தி பொது இணக்கப்பாட்டுடன் செயற்பட வேண்டும்.

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ராஜபக்ஷர்களை பாதுகாப்பதை விடுத்து மக்களின் கோரிக்கைகமைய செயற்பட வேண்டும் என 43ஆவது படையணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட வகையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை நாட்டு மக்கள் வீழ்த்தியுள்ளார்கள்.

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவின் தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் மக்கள் பெரும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளார்கள்.

போராட்டகாரர்களின் அர்ப்பணிப்பினை கருத்திற்கொண்டு சட்டவாக்கசபை பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

பாராளுமன்றில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பின் போது ஒருவரை தோற்கடித்து பிறிதொருவரை வெற்றிப்பெற செய்யும் விடயம் குறித்து அவதானம் செலுத்தாமல், வங்குரோத்தடைந்துள்ள நாட்டை எவ்வாறு நெருக்கடியில் இருந்து சகல தரப்பினரும் அவதானம் செலுத்த வேண்டும்.

69 இலட்சம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை நாட்டு மக்கள் ஜனநாயக ரீதியில் புறக்கணித்துள்ளார்கள். இடைக்கால ஜனாதிபதி தெரிவு ஜனநாயக கோட்பாட்டிற்கமையவும், எதிர்காலத்தை கருத்திற் கொண்டதாகவும் அமைய வேண்டும். போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் அனைவரும் முதலில் பொது இணக்கப்பாட்டிற்கு வர வேண்டும்.

பாராளுமன்றில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு பெரும்பாலான ஆசனங்கள் உள்ளன. இக்கட்சியின் உறுப்பினர்கள் ராஜபக்ஷர்களின் குடும்பத்தை பாதுகாக்கும் நோக்குடன் செயற்படாமல் தம்மை தெரிவு செய்த மக்களின் அபிலாசைக்கமைய செயற்பட வேண்டும். பொதுஜன பெரமுனவின் ஒருசில உறுப்பினர்கள் இன்றும் ராஜபக்ஷர்களை பாதுகாக்கும் நோக்குடன் செயற்படுவது ஆச்சரியமாகவுள்ளது என்றார்.