இலங்கையில் சீனாவின் உளவுத்துறை கப்பல்- இந்தியாவிற்கு அச்சுறுத்தல்

அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரும் உயர் தொழில்நுட்ப சீன ஆராய்ச்சி கப்பலின் பயணத்தை பிற்போடுமாறு கொழும்பு கோரியதை அடுத்து சீனத் தூதரகம்இலங்கையின் சிரேஸ்ட அதிகாரிகளுடன் அவசர சந்திப்பை கோரியுள்ளது.

சீனாவின் விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு ஆய்வுக் கப்பலான ‘யுவான் வாங் 5’ ஆகஸ்ட் 11 முதல் 17 வரை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் இந்தியாவின் கடும் அதிருப்தியின் காரணமாக, இலங்கையின் வெளிவிவகார அமைச்சு கொழும்பில் உள்ள சீன தூதரகத்திற்கு ஆகஸ்ட் 5 திகதியிட்ட ராஜதந்திர ‘மூன்றாம் நபர்’ குறிப்பில், இந்த விவகாரம் குறித்து மேலும் ஆலோசனை செய்யப்படும் வரை யுவான் வாங் 5 கப்பல், அம்பாந்தோட்டைக்கு வருவதை ஒத்திவைக்குமாறு கோரியிருந்தது.

இந்தியாவின் கடும் அதிருப்தி
இதனையடுத்து சீன தூதுவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, பீஜிங்கின் ஆலோசனையை பெற்று பதில் கூறுவதாக அறிவித்திருந்தார் என்று முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் இந்த சந்திப்பு குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளை ஜனாதிபதி அலுவலகம் மறுத்துள்ளது.
இந்த நிலையிலேயே சீன தூதரகம், இலங்கையின் சிரேஸ்ட அதிகாரிகளின் சந்திப்பை கோரியிருக்கும் செய்தி வெளியாகியுள்ளது.