இலங்கை – சீன உறவை சீர்குலைக்க வேண்டாம் – சீன பேச்சாளர் வோங் வென்பின்

இலங்கை தற்போது பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுடன் போராடிக்கொண்டிருக்கின்றது. இவ்வாறானதொரு நிலையில், மேலும் நெருக்கடிகளை கொடுக்கும் வகையில் பிற நாடுகள தலையீடுகளை செய்வது தார்மீக ரீதியாக பொறுப்பற்றதாகும். அத்துடன் அதுவொரு இழிவானதொரு செயல் என சீன கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை சீர்குலைக்கும் அநாவசியமான தலையீடுகளை நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரை கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கான சீனத் தூதுவர் கடந்த சனிக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து யுவான் வோங் – 5 கண்காணிப்பு கப்பலின் சுற்றுப்பயணத்தை தாமதப்படுத்துமாறு கோரிக்கை விடுத்ததை உறுதிப்படுத்த முடியுமா என பன்னாட்டு ஊகவியலாளர்களை சந்தித்த சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வோங் வென்பிங்கிடம் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்த நிலையில் அவர் மேலும் தெரிவக்கையில்,

இந்தியப் பெருங்கடலில் உள்ள முன்னணி கடல் போக்குவரத்து மையங்களில் இலங்கையும் ஒன்று. எனவே தான் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அறிவியல் ஆய்வுக் கப்பல் தேவைகளுக்காக இலங்கையின் துறைமுகங்களை தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்படுகின்றன. சீனா எப்போதும் தங்கள் கடல்சார் ஆராய்ச்சிப் பணிகளைச் செய்வதற்கு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை முழுமையாக பயன்படுத்தும்.

இலங்கை ஒரு சுயாதீனமான நாடு. மற்ற நாடுகளுடன் அவர்களின் உறவுகளை வளர்த்துக்கொள்ளும் உரிமையை மதிக்கிறோம். அத்தகைய பொதுவான ஒத்துழைப்பைகளை உருவாக்கிக்கொள்வது இரு நாடுகளுக்குமே சுதந்திரம் உள்ளது. இவ்வாறான ஒத்துழைப்புகள் இரு தரப்பினரின் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. எந்தவொரு மூன்றாம் தரப்பினரையும் குறிவைக்கவில்லை என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் இலங்கையின் உள் விவகாரங்களில் செல்வாக்கு செலுத்துவது முற்றிலும் நியாயமற்றதாகும் என நீண்ட தெளிவுப்படுத்தலை வழங்கியுள்ளார்.

மறுப்புறம் சர்ச்சைக்குறிய யுவான் வொங் – 5 கண்காணிப்பு கப்பலின் இலங்கைப் விஜயம் தொடர்பில் உயர்மட்ட மட்ட கலந்துரையாடல்களை முன்னெடுக்க பெய்ஜிங் தீர்மானித்துள்ளது.

கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தினால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் 13ஆம் திகதி சீனாவின் ஜியாங்கின் துறைமுகத்தில் இருந்து ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதற்கான அனுமதியை இலங்கை பாதுகாப்பு அமைச்சு வழங்கியிருந்தது.

இது குறித்த கடும் அதிருப்தியை வெளியிட்ட இந்தியா, குறித்த கப்பல் விஜயத்தால் இந்திய தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தால் அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் ஆரம்பத்தில் இந்திய வெளியுறவுத்துறை பேச்சாளர் அரிந்தம் பக்ஷி குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் யுவான் வொங் – 5 கண்காணிப்பு கப்பலை இலங்கைக்குள் அனுமதித்து விடக்கூடாது என்பதில் இந்தியா தனது இராஜதந்திர தடங்கள் ஊடாக கமையான அழுத்தங்களை இலங்கை மீது பிரயோகித்தது. இந்த அழுத்தங்களிளால் கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் இலங்கை கோரியுள்ளது. ஆனால் சீனா இலங்கையின் கோரிக்கைக்கு பதிலளிக்காது உயர் மட்ட கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.