பதவிகளை ஏற்காது மக்கள் நலனுக்காக அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் – சஜித்

தவிகள் எதனையும் ஏற்காமல், மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு நாம் தயாராக உள்ளோம்.

அதற்கு அரசாங்கம் மக்கள் மீது பிரயோகிக்கும் அடக்குமுறைகளை கைவிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

மஹரகம பல் மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு புதன்கிழமை (ஒக் 19) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மக்களுக்கு சேவையாற்றுவதற்கு பதவிகள் அவசியமற்றவை. அதற்கு இயலுமை மாத்திரமே போதுமானது. தற்போது அரசாங்கத்தின் அடக்குமுறைகள் பரவலடைந்து செல்கின்றன.

இவ்வாறு மக்கள் மீது அடக்குமுறைகளை பிரயோகிக்கும் அரசாங்கத்துடன் எவ்வித தொடர்பினையும் பேணுவதற்கு நாம் தயாராக இல்லை.

அன்று என்னையும் பிரதமராக பதவியேற்குமாறு கோரினர். எனினும், எமது கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல், நான் அந்த கோரிக்கைகளை நிராகரித்தேன்.

தற்போது நாட்டில் மக்கள் உயிர் வாழ்வதற்காக போராடிக்கொண்டிருக்கின்றனர். இந்த போராட்டத்திலிருந்து மீள்வதற்காகவே அவர்கள் ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காகவே அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இதனை அரச பயங்கரவாத செயற்பாடாகவும், மிலேச்சத்தனமான செயற்பாடாகவுமே காண்கின்றோம். இந்த அடக்குமுறைகளிலிருந்து விலகி, அனைவரும் ஒன்றிணைந்து அபிவிருத்தி செயற்பாடுகளில் ஈடுபடுவோம்.

பதவிகள் எதனையும் ஏற்காமல் அரசாங்கத்துடன் இணைந்து மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு நாம் தயாராக உள்ளோம்.

எனவே, அடக்குமுறைகளை கைவிட்டு, நேர்மையாகவும் ஒழுக்கத்துடனும் செயற்படுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.