ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர், பேராயருடன் ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதி சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார சேவைப்பிரிவின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களப் பணிப்பாளர் பயோலா பம்பலொனி நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி, மனித உரிமைகள் நிலைவரம், சட்ட மறுசீரமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அதேவேளை இன்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான தொடர்புகளை விரிவுபடுத்தல், ஆட்சிநிர்வாகம் மற்றும் மனித உரிமைகளை வலுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள சட்ட மற்றும் ஏனைய நடவடிக்கைகள் என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

மேலும் இன்றைய தினம் பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்துள்ள பயோலா பம்பலொனி, இலங்கையிலுள்ள மதச்சிறுபான்மையின மக்களின் நிலை தொடர்பில் கேட்டறிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.