மக்களின் பூரண ஆதரவோடு மாவீரர்களை நினைவேந்த உணர்வுபூர்வமாக தயாராகும் முல்லை மாவட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் நாளை 27 ஆம் திகதி இடம்பெறவுள்ள மாவீரர் நாளுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன .

மாவீரர்களை நினைவேந்த அனைத்து துயிலும் இல்லங்களிலும் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் இணைந்து உணர்வுபூர்வமாக ஏற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றனர்.

நாளை 27 ஆம் திகதி மாலை 06.05 மணிக்கு ஆலயங்களில் மணியோசை எழுப்பப்பட துயிலும் இல்லங்கள் வீடுகள் பொது இடங்களில் சம நேரத்தில் சுடர் ஏற்றபட உள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 10 க்கும் மேற்பட்ட  மாவீரர் துயிலும் இல்லங்களில்  2022 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த அனைவரையும்  அணிதிரண்டு வருமாறும் அந்தந்த துயிலும் இல்லங்களின்  பணிக்குழுவினர்  அழைப்பு விடுத்துள்ளனர்

தாயக விடுதலைக்காக தங்களது இன்னுயிர்களை ஆகுதியாக்கிக் கொண்ட மாவீரர்களை நினைவுகூர்ந்து வருடம்தோறும் நவம்பர் இருபத்தேழாம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இந்தவருடமும் மாவீரர் நாளுக்கான நினைவேந்தல் நிகழ்விற்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பாதுகாப்பு தரப்பினரின்  கெடுபிடிகளுக்கு மத்தியிலும் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை உறவுகளின் போக்குவரத்து வசதி கருதி போக்குவரத்து வசதிகளும்  செய்யப்பட்டுள்ளன.