பாராளுமன்ற ஊழியர்கள் எவரும் கொவிட்-19ஆல் பாதிக்கப்படவில்லை: பாராளுமன்ற செயலாளர் நாயகம்

பாராளுமன்ற ஊழியர்கள் எவரும் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்படவில்லை என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க இன்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாராளுமன்ற ஊழியர் ஒருவர் அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விரைவான அன்டிஜென் சோதனையில் அவருக்கு கொவிட்-19 தொற்று இல்லை என்பது உறுதியானது. குறித்த ஊழியர் 14 நாள் தனிமைப்படுத்தலுக்காக வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அவர் பணிபுரிந்த இடமும் அதைச் சுற்றியுள்ள பிரதேசமும் முற்றிலும் கிருமி நீக்கம் செய்யப்பட்டது என்றார்.

இதனிடையே எழுமாறாக தெரிவு செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மீது பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் எவரும் கொவிட்-19 பாதிப்புக்கு ஆளாகவில்லை என்று பொதுச்செயலர் மேலும் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற நடவடிக்கைகள் எவ்வித இடையூறுமின்றி வழக்கம் போல் தொடரும் என்றும் அவர் கூறினார்.