வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை அங்கேயே அடக்கம் செய்வது தொடர்பில் அவதானம் – அலி சப்ரி

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு 30 இலட்சம் ரூபா வரையில் செலவாகும். அதற்கான நிதியை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்ட  நிலையில் உடலை அங்கேயே அடக்கம் செய்வது தொடர்பில் அவரது குடும்பத்தாருடன்  பேச்சுவார்த்தையை மேற்கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

வியட்நாம் முகாமில் உள்ளவர்களில் 85 பேர் இலங்கைக்கு வருகை தர இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.இவர்களை இன்னும் இருவார காலத்திற்குள் நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (28) திங்கட்கிழமை நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் போக்குவரத்து ,வெளிவிவாகரம் மற்றும் ஊடகத்துறை ஆகிய அமைச்சுக்கள் மீதான  விவாதத்தில் உரையாற்றியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எஸ்.சிறீதரன்  முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்..சிறிதரன் குறிப்பிட்டதாவது,

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கனடாவுக்கு செல்லும் நோக்கில் சுமார் 300 இற்கும் அதிகமான இலங்கையர்கள்  கப்பலில் சென்றபோது கடற்பரப்பரப்பில் விபத்துக்கு உள்ளாகி  வியட்நாம் நாட்டில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களில்  37 வயதுடைய சுந்தரலிங்கம் கிரிகரன் என்பவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.அவரின் உடல் அங்கேயே இருக்கின்றது. அவரை உடலை இங்கே கொண்டு வர 30 இலட்சம் ரூபா செலவாகும் என்கின்றனர்.

அவரின் மனைவியும் அவரின்  பிள்ளைகளும் அவருடைய முகத்தை பார்க்க விரும்புகின்றனர். அவர்கள் வருமையில் இருக்கின்றனர். புலம்பெயர்ந்தவர்கள் அதற்காக உதவ தயாராக இருக்கின்றனர். அவரின் உடலை கொண்டு வருவதற்கு என்ன செய்யலாம்? இதற்கான வழியென்ன என வெளிவிவகாரத்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி,

இந்த விடயம் தொடர்பில் வியட்நாமில் உள்ள இலங்கைக்கான தூதுவருடன் கலந்துரையாடினேன். 303 பேர் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர்களில் 2 பேர் மதுசாரம் கொண்ட கைகழுவும் திரவத்தை குடித்துள்ளனர்.ஒருவர் உயிரிழந்துள்ளார்.

3030 பேரில்  85 பேர்  இலங்கைக்கு வருகை தர இணக்கம் தெரிவித்துள்ளனர். இவர்களை இன்னும் இரு வார காலத்திற்குள் இலங்கைக்கு  அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..

இலங்கைக்கு வர முடியாது என்று கூறுபவர்கள் தொடர்பில் ஐநா மனித உரிமைகள் பேரவை அவர்களிடம் விசாரணை நடத்தும். அது நீண்டதொரு வழிமுறையாகும்.

இந்நிலையில் இறந்தவரின் உடலை கொண்டு வருவதற்கு 3 மில்லியன் நிதியை எங்களுக்கு செலுத்துவதற்கு அனுமதியில்லை.அது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். இல்லாவிட்டால் அங்கேயே அடக்கம் செய்ய வேண்டும். இது குறித்து குடும்பத் தரப்பில் இருந்து பதில் வரும் வரையில் காத்திருக்கின்றோம் என்றார்.

இதன்போது மீண்டும் எழுந்து உரையாற்றிய எஸ்.சிறிதரன்,’

உயிரிழந்தவரின் குடும்பம் மிகவும் வறுமை நிலையில் உள்ளது.30 இலட்சம் செலுத்தும் நிலையில் அவர்கள் இல்லை..இவ்விடயத்தில் புலம் பெயர் தமிழர்கள் உதவ தயாராக உள்ளார்கள். ஆகவே இதற்கு ஒரு வழிமுறையை கையாண்டு, உடலை கொண்டு வர நடவடிக்கை எடுங்கள், அவரது பிள்ளைகளின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்.

நாட்டின் பொருளாதார பாதிப்பால் நாடு கடந்து செல்பவர்கள் தொடர்பில் சர்வசே நிறுவனங்கள் மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டும் என சர்வதேசத்திடம் வலியுறுத்தினார்.