சீனா இலங்கையின் நண்பனல்ல – ராஜபக்ஷர்களின் நண்பன் – சபையில் சாணக்கியன் தெரிவிப்பு

சீனா உண்மையான நட்பு நாடாக இருந்தால் கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் இலங்கைக்கு சார்பாக செயல்பட வேண்டும்.

சீனா இலங்கையின் நண்பனல்ல. ராஜபக்ஷர்களின் நண்பன். சீனாவின் முதலீடுகள் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கு சாதகமாக அமையவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்டத்துறை, கைத்தொழில் மற்றும் உணவு பாதுகாப்பு அமைக்கு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்டத்துறை அமைச்சுக்கு 10.7 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை கொண்டு பெருந்தோட்ட மக்களுக்கான நலன்சார்ந்த திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.

நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக காலம் காலாமாக இருக்கும் பெருந்தோட்ட மக்களுக்கு இந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஏதாவது நலன்புரி திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

நாட்டுக்கு அந்நிய செலாவணியை காலம் காலமாக ஈட்டித் தரும் பெருந்தோட்ட மக்களுக்காக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கெர்டுப்பது அவசியமானது.

அரச நிதியை மோசடி செய்து நாட்டை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளவர்களுக்கு எதிராக எடுத்துள்ள நடவடிக்கை என்ன? மோசடி செய்யப்பட்ட அரசுடமையாக்க ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா ? ஆனால் நாட்டை அபிவிருத்தி செய்யும் அமைச்சுகளுக்கு சொற்ப நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது.

சீனா அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், கொழும்பு துறைமுக நகரத்தையும் தனதாக்கியுள்ளது. இந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த சீனா எந்த அபிவிருத்தி முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. சீனாவின் முதலீடுகளில் இலங்கைக்கு எவ்வித நலனும் கிடைக்கப் பெறவில்லை.

சீனா இலங்கையின் நெருங்கிய நண்பன் என்று குறிப்பிடுகிறார்கள். அவ்வாறாயின் கடன்மறுசீரமைப்பு விவகாரத்தில் இலங்கைக்கு சீனா ஆதரவாக செயற்பட வேண்டும்.

இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் மனித உரிமை பேரவையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கும் போது சீனா இலங்கைக்கு ஆதரவாக செயற்படுகிறது.

இதனை பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சீனா இலங்கைக்கு சார்பாக செயற்படுகிறது என குறிப்பிடுகிறார்கள். இதனை பைத்தியகாரதனமாக பேச்சு என்று குறிப்பிட வேண்டும்.

சீனாவில் ஜனநாயகம், மனித உரிமைகள் இல்லை. மத சுதந்திரம் இல்லை. இவ்வாறான சூழலையா இலங்கையிலும் ஏற்படுத்த முயற்சிக்கின்றீர்கள்.

சீனா இலங்கையின் உண்மையான நட்பு நாடு இல்லை. மஹிந்த ராஜபக்ஷவினதும், அவரது குடும்பத்தினரது நண்பராகவே சீனா உள்ளது.