பிரித்தானியாவில் இனவெறியா ? அம்பலப்படுத்திய – ரிஷி சுனக்

 

கடந்த காலங்களில் தானும் கடுமையான இனவெறியை எதிர்கொண்டுள்ளதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனையில் இடம்பெற்ற விருந்து நிகழ்ச்சியில் இடம்பெற்ற இனவெறி சர்ச்சை காரணமாக மறைந்த ராணி 2-ம் எலிசபெத்தின் உதவியாளரான லேடி சூசன் ஹஸ்சி அரச குடும்பத்தால் தனக்கு வழங்கப்பட்டிருந்த கௌரவ பதவிகளை இராஜினாமா செய்திருந்தார்.

இந்த நிலையில் லண்டனில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இனவெறி பிரச்சினை குறித்து பிரதமர் ரிஷி சுனக்கிடம் கேள்வியெழுப்பப்பட்ட நிலையில், இவ்வாறு பதிலளித்துள்ளார்.

இது குறித்து இந்திய வம்சாளியை சேர்ந்த ரிஷி சுனக் பதிலளிக்கையில்

அரச அரண்மனை தொடர்பான விடயங்களில் நான் கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. இருப்பினும் இந்த பிரச்சினையில் என்ன நடந்தது என்பதை நாம் பார்க்கிறோம். அவர் தவறை ஒப்புக்கொண்டு அதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளார்.

கடந்த காலங்களில் நானும் இனவெறியை எதிர்கொண்டுள்ளேன். நான் சிறுவனாக இருந்தபோதும், இளைஞனாக இருந்தபோதும் அதை அனுபவித்துள்ளேன். ஆனால் இப்போதும் அது நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

ஏனெனில் இனவெறியை கையாள்வதில் நம்முடைய நாடு நம்ப முடியாத முன்னேற்றம் அடைந்துள்ளது. இருப்பினும் நாம் செய்ய வேண்டிய பணிகள் இன்னும் உள்ளன. அத்துடன் நாம் தொடர்ந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு சிறந்த எதிர்காலத்துக்கு செல்வது சரியானது” எனவும் கூறியுள்ளார்.