சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரிக்க பிரத்தியேக நீதிமன்றம் – அமைச்சர் விஜயதாஸ

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள பிரத்தியேக நீதிமன்றத்தை  ஸ்தாபிக்க பிரதம நீதியரசர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஆண்டு இந்த பிரத்தியேக நீதிமன்றம் ஸ்தாபிக்கப்படும் என நீதி சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (டிச. 05) இடம்பெற்ற நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு  மறுசீரமைப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகள் தொடர்பில் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே  அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் நீதியமைச்சர்  கூறுகையில்,

நீதிமன்றங்களில் தண்டப்பணம் உட்பட பல்வேறு அறவிடல் ஊடாக நாளாந்தம் பில்லியன் ரூபா வரை கிடைக்கப் பெறுகிறது,

இருப்பினும் அந்த தொகையை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் அதிகாரம் நீதியமைச்சுக்கு கிடையாது. ஆகவே இந்த நிதியை நீதிமன்ற செயற்பாடுகளுக்காக பயன்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

நிலுவையில் உள்ள சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் வகையில்  பிரத்தியேக நீதிமன்றங்களை ஸ்தாபிக்க பிரதம நீதியரசர் இணக்கம் தெரிவித்துள்ளார். இந் நீதிமன்றங்கள் எதிர்வரும் ஆண்டு ஸ்தாபிக்கப்படும்.

காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுகிறது. 1753 ஆவணங்கள் இதுவரையில் நிறைவு செய்யப்பட்டுள்ளன.பாதிக்கப்பட்டுள்ள தரப்பினருக்கு வழங்கப்படும் நட்டத்தை இரண்டு இலட்சமாக வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார்.