ஆர்ப்பாட்டங்களில் முன்னின்று செயற்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் – நிமல் சிறிபால

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டவர்கள் இடம்பெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும் என கப்பற்துறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் 24 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார நெருக்கடி தொடர்பில் தற்போது விமர்சனங்களை முன்வைப்பவர்கள் நெருக்கடியான சூழ்நிலையில் அரசாங்கத்தை பொறுப்பேற்கவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இக்கட்டான நிலையில் அரசாங்கத்தை பொறுப்பேற்று நெருக்கடி நிலையை முகாமைத்துவம் செய்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்கள் ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள்.மக்களாணையுடன் ஆட்சிக்கு வர முடியாத தரப்பினர் ஜனநாயக போராட்டத்தை வன்முறை போராட்டமாக மாற்றியமைத்தார்கள்.

அரகலயவில் முன்னின்று செயற்பட்ட கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் என குறிப்பிட்டுக் கொள்ளும் தரப்பினர் இடம்பெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும்.

மக்கள் மத்தியில் இவர்களுக்கு எந்தளவிற்கு நல்ல வரவேற்பு உள்ளது என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும்.போராட்டத்தில் ஈடுப்படுபவர்கள் அனைவரையும் மக்கள் தமது பிரநிதிகளாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும்.நாட்டு மக்கள் நெருக்கடியான நிலையில் இருக்கும் போது அரசியல் ரீதியான தீர்மானத்தை சிறந்த முறையில் எடுக்கமாட்டார்கள்.தேர்தலை பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரச செலவுகள் குறைக்கப்பட வேண்டும் என மக்கள் வலியுறுத்துகிறார்கள்.

உள்ளூராட்சி மன்றங்களின் 8800 உறுப்பினர்கள் எண்ணிக்கையை 5100 ஆக குறைப்பதற்காகவே புதிய எல்லை நிர்ணய குழு நியமிக்கப்பட்டுள்ளது.புதிய எல்லை நிர்ணய அறிக்கைக்கு அமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெற வேண்டும் என்றார்.