சுமந்திரனின் பொய்களை அம்பலப்படுத்திய சட்டத்தரணி தவராசா- வெடித்தது சர்ச்சை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான பங்காளி கட்சியான இலங்கை தமிழரசு கட்சி தனது பாரம்பரிய கூட்டாளிகளுக்கு மேல் அதிகமாக மற்ற தமிழ் கட்சிகளை சேர்த்து பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான கோரிக்கையை தமிழரசு கட்சியின் அரசியல் குழு நிராகரித்திருப்பதாக தமிழரசு கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்த கருத்தை தமிழரசு கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா வன்மையாக கண்டித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான பங்காளி கட்சியான இலங்கை தமிழரசு கட்சி தனது பாரம்பரிய கூட்டாளிகளுக்கு மேல் அதிகமாக மற்ற தமிழ் கட்சிகளை சேர்த்து பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான கோரிக்கையை தமிழரசு கட்சியின் அரசியல் குழு நிராகரித்திருப்பதாக தமிழரசு கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இறுதி முடிவு
அவ்வாறான ஒரு தீர்மானம் தமிழரசு கட்சியின் அரசியல் குழுவில் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை.

அரசியல் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் குழு உறுப்பினர்கள் சகலரும் தங்களுடைய கருத்துக்களை முன்வைத்தார்கள்.

பின்னர் இறுதி தீர்மானத்தை தை மாதம்7 ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெற உள்ள மத்திய குழு கூட்டத்தில் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை எடுப்பதாகவும் அதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்போடு கலந்துரையாடி இறுதி முடிவு எடுப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

எந்த சூழ்நிலையிலும் மற்றைய தமிழ் தேசிய கட்சிகளை தேர்தலில் கூட்டணியாக உள்வாங்குவதில்லை என்ற முடிவு. இணைய வழி முறையில் நடத்தப்பட்ட அரசியல் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை.

உண்மைக்கு புறம்பான கருத்து
இணைய வழி முறையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பத்து பதினைந்து நிமிடங்களில் தனக்கு வேறு ஒரு கூட்டம் உள்ளதாக கூறி வேறு ஒரு கூட்டத்திற்கு சென்று விட்டார். இறுதிவரை அவர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொள்ளவில்லை.

பொய்யான அறிக்கையை பொறுப்புள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடகங்களுக்கு வேண்டுமென்றே உண்மைக்கு புறம்பான கருத்தை தெரிவித்திருப்பது கவலைக்குரிய விடயமாகும் என்பதை பொறுப்போடு கூறிக்கொள்கின்றேன் என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா மேலும் தெரிவித்துள்ளார்.