இலங்கையில் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் கனடா

ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் (IFRC) மனிதாபிமான முறையீடுகளுக்கு பதிலளிக்கும் வகையில், இலங்கையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு கனடா 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை (ஏறத்தாழ 817 மில்லியன் இலங்கை ரூபா) வழங்குகிறது.

அவசரகால உணவு உதவி, சுகாதாரம், ஊட்டச்சத்து சேவைகள், பாதுகாப்பான நீர் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் அதிகமாக தேவைப்படுபவர்களுக்கு ஐ.நா மற்றும் IFRC மூலம் அவர்களின் உள்ளூர் பங்காளர்களுடன் இணைந்து இந்த சேவைகள் வழங்கப்படும்.

மேலும், இலங்கையின் உடனடி தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள், பொருட்களை கொள்வனவு செய்தல் உட்பட இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவுவதற்கும் தொடர்ந்து சர்வதேச உதவித் திட்டங்களை கனடா முன்னெடுத்துள்ளது.

இந்த இக்கட்டான காலங்களில் அனைத்து இலங்கையர்களுடனும் கனடா தொடர்ந்து நிற்கிறது. அத்துடன் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளமான இலங்கையை ஆதரிப்பதில் உறுதியாக உள்ளது.