இரு தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை மறுப்பு: வெளியான காரணம்

தமிழ் அரசியல்வாதிகளின் விடுதலை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

13வது அரசியலமைப்பை முழுமையாக அமுல்செய்யப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அண்மையில் இடம்பெற்ற சர்வக்கட்சி மாநாட்டில் கூறியபோது, பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச மௌனமாக இருந்தமை இந்த சந்திப்பின் குறிப்பிடத்தக்க அம்சமாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு முறை ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் பதவி வகித்த அரசியல்வாதி அமர்வு முழுவதும் அமைதியாகவே இருந்தார்.

எனினும் அவருக்குப் பின் ஜனாதிபதியாக பதவியேற்ற மைத்திரிபால சிறிசேன, அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவை வெளியிட்டார்.

இதேவேளை தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான கலந்துரையாடலின் போது, பெப்ரவரி 4ஆம் திகதி மூவர் மாத்திரம் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூவர் விடுதலை
இதேவேளை முக்கியமான குற்றச்செயல்களில் ஈடுப்பட்ட இருவர் தொடர்ந்தும் சிறையில் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரன், 2008 ஜனவரி 1ஆம் திகதியன்று கொழும்பின் இந்துக் கோவில் ஒன்றுக்குள் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த கொலைக் குற்றவாளியை விடுவிக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவைக் கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காகத் தண்டனை பெற்றவரும் விடுவிக்கப்பட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலாளியை விடுவிக்க விரும்புவதாக பொன்சேகா நாடாளுமன்றத்தில் அறிவித்த போதிலும், அவரது கையொப்பமிடப்பட்ட ஒப்புதல் பெறப்படவில்லை.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் இன்னும் அவரிடம் கலந்தாலோசிக்கவில்லை என பொன்சேகாவின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.