அமெரிக்காவின் உடன்பாட்டுடன் சீனாவின் இணக்கப்பாடின்றி நாணய நிதியத்திடமிருந்து கடனுதவி பெற முடியும் – ஹர்ஷ டி சில்வா தகவல்

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவின் இணக்கப்பாடு இன்றி சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு கடனுதவிகளை வழங்க முடியும். அதற்கு அமெரிக்காவுடன் இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும். இது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (09) வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நிலையான அபிவிருத்திக்கு மக்கள் ஆணை அவசியமாகும். எனவே தற்போதைய அரசாங்கத்தில் பொருளாதார மீட்சி என்பது மிகவும் மந்தமானதாகவே காணப்படும். உழைக்கும் போதே செலுத்தும் வரியை நீக்கினால் நாடு 100 பில்லியன் ரூபாவை இழக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதே போன்று வரி எல்லையை இரண்டு இலட்சம் வரை அதிகரித்தால் நாடு 63 பில்லியன் ரூபாவை இழக்கும். இழக்கப்படும் மொத்த தொகை 163 பில்லியன் ரூபாவாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் உழைக்கும் போதே செலுத்தும் வரி மற்றும் வருமான வரியின் ஊடாக 100 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்ட முடியாது.

நாம் கூறுவது பொய் எனில் எவ்வாறு 100 பில்லியன் ரூபா கிடைக்கப் பெறும் என்பதை ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டும். அரச ஊழியர்கள் வரி செலுத்துவதற்கு தயாராகவே உள்ளனர். அதற்காக 36 வீத வரியை அறவிடுவது நியாயமற்றது. உதாரணமாக மாதாந்தம் சுமார் 30 இலட்சம் வருமானம் பெரும் ஒருவருக்கு 36 வீத வரி என்பது நியாயமானதாகும். ஆனால் ஒரு இலட்சம் பெறுபவர் முதல் 30 இலட்சம் பெறுபவர் வரை அனைவருக்கும் ஒரேயளவில் வரி அறவிடப்படுவது நியாயமற்றது.

கடன் மறுசீரமைப்புக்களின் போது கடன் வழங்குனர்களின் ஒரு தரப்பு இணக்கம் தெரிவிக்காவிட்டாலும் சர்வதேச நாணய நிதியத்தினால் கடனுதவியை வழங்க முடியும். சுரினா நாட்டுக்கு சீனாவின் இணக்கப்பாடு இன்றியே நாணய நிதியம் கடனுதவியை வழங்கியது. இதே போன்று இலங்கைக்கும் வழங்க முடியும். ஆனால் இது தொடர்பில் அமெரிக்காவுடன் இணக்கப்பாட்டை எட்டுவதற்கு இலங்கை முயற்சிக்க வேண்டும். காரணம் சர்வதேச நாணய நிதியத்தில் அமெரிக்கா பெரும்பான்மை வகிக்கின்றமையினாலாகும். இது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.