ஒற்றையாட்சிக்குள் அரசியல் தீர்வு என்றால் இந்த நாடு ஒருபோதும் உருப்படாது – சிறிதரன்

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தினால் பிரசவிக்கப்பட்ட 13 ஆவது திருத்தம் உயிருடன் உள்ளதா? அல்லது கொல்லப்பட்டு அஸ்தி கரைக்கப்பட்டு விட்டதா என்று எண்ணத் தோன்றுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் தீர்வு வழங்குவதாக ஒருபுறம் குறிப்பிட்டு விட்டு மறுபுறம் சிங்கள பேரின வாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளார்.

பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டி விடுகிறார். ஒற்றையாட்சிக்குள் அரசியல் தீர்வு என்றால் இந்த நாடு ஒருபோதும் உருப்படாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிரிதரன் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) இடம்பெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது.

துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பூமியதிர்ச்சி இயற்கையின் கோர தாண்டவத்தினால் துருக்கி மற்றும் சிரியா நாட்டு மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

உயிர் வாழ்வதற்காக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை கவலைக்குரியது,ஆகவே துருக்கி மற்றும் சிரியாவின் சம்பத்திற்கு உயரிய சபை ஊடாக ஆழ்ந்த கவலையை தெரிவித்துக் கொள்கிறோம்.

தற்போதைய காலக்கட்டம் இலங்கையின் அரசியல் நிலைவரத்தை தீர்மானிக்கும் நிலையில் காணப்படுகிறது.ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க அரசியல் தீர்வு தொடர்பில் ஒருசில வார்த்தை பிரயோகத்தை வெளியிட்டார்.இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 35 ஆண்டு காலம் நிறைவடையும் நிலையில் உள்ளது.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தினால் பிரசவிக்கப்பட்ட அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு 35 வயதாகும் நிலையில் 13 ஆவது திருத்தத்திற்கு எதிராக மீண்டும் போர் கோசங்கள் எழுப்பப்பட்டுள்ளன.13 ஆவது திருத்தம் என்ற குழந்தை உள்ளதா அல்லது கொல்லப்பட்டு,அஸ்தி கரைக்கப்பட்டு விட்டதா என்று கேள்வி கேட்கும் நிலை காணப்படுகிறது.

சிங்கள தலைவர்கள் தொடர்ந்து ஒற்றையாட்சி என்ற கோசத்தை எழுப்பிக் கொண்டு நாட்டை மீண்டும் அதாள பாதாளத்திற்கு கொண்டு செல்கிறார்கள்.

முன்னாள் பிரதமர் எஸ.டி.பண்டாரநாயக்க சமஷ்டி தொடர்பான யோசனையை முன்வைத்தார்.கரையோரச் சிங்களம்,மலைநாட்டுச் சிங்களம்,யாழ் தமிழ் என்ற சமஷ்டி அடிப்படையிலான யோசனைகளை 1926 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பத்திரிகைள் வாயிலாக வெளியிட்டார்.இறுதியில் பௌத்த பிக்குவினால் அவர் படுகொலை செய்யப்பட்டார்.

போர் என்றால் போர்,சமாதானம் என்றால் சமாதானம் என்று குறிப்பிட்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜேவரத்ன குறிப்பிட்டு அமைதி வழி போராட்டத்தை ஆயுத போராக மாற்றியமைத்தார். போர் பிரகடனமே இன்று நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

நாட்டில் அரசியல் முரண்பாடு புரையோடிப் போயுள்ள பின்னணியில் 2048 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிடுவது வேடிக்கையாகவுள்ளது.

ஒற்றையாட்சி முறைமைக்குள் தான் அரசியல் தீர்வு என அரச தலைவர் குறிப்பிடுவது இந்த நாட்டை ஒருபோதும் உருப்பட செய்யாது. நாட்டு மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டுமாயின் பிளவுப்படாத நாட்டுக்குள் சமஷ்டி ஆட்சி முறையில் தீர்வு வழங்க வேண்டும்.

யுத்த காலத்திலும், இறுதி யுத்த காலத்தில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். பல இலட்சக்கணக்கான எமது உறவுகள் காணாமலாக்கப்பட்டுள்ளார்கள்.பல ஆதாரங்கள் உள்ளன.

இந்த மண்ணில் இன அழிப்பு இடம்பெற்றுள்ளது,இழக்க முடியாத அனைத்தையும் எமது இனம் இழந்துள்ளது. இழப்பிற்கு பின்னரும் ஒன்றிணைந்து வாழ்வதற்கு தலைப்படுகிறோம். ஒன்றிணைந்து வாழும் அரசியல் உரிமை சமஷ்டி முறைமையுடன் கோருகிறோம்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் ஊடாக வழங்கப்பட்ட பல உரிமைகள் 28 நீதிமன்ற தீர்ப்புக்கள் மற்றும் அரச சுற்றறிக்கை ஊடாக பறிக்கப்பட்டுள்ளன.

நாட்டில் அரசியலமைப்பு முறையாக செயற்படுத்தப்படுகிறதா,13 ஆவது திருத்தத்திற்கு எதிராக பிக்குகள் போர் கொடி தூக்கியுள்ளார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டி விடும் வகையில் அரசியல் தீர்வு வழங்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு சிங்கள பேரிண வாதத்தை தூண்டி விடுகிறார்.

சமஷ்டி முறைமையில் தீர்வு வழங்க தயாராக இருந்தேன்,ஆனால் அதற்கு சிங்களவர்கள் இடமளிக்கவில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இறுதியில் குறிப்பிடுவார்.

தமிழ் இனத்தை அழித்து யுத்தத்தை வெற்றிக் கொண்டோம் என்ற மததையின் வெற்றி போதையில் இருந்த ராஜபக்ஷ குடும்பத்தை சிங்கள மக்கள் விரட்டியடித்தார்கள்.

ஜனாதிபதியின் அக்கிராசன உரை நாட்டின் அடிப்படை பிரச்சினைகளுக்கும், இனப்பிரச்சினைக்கும் எவ்விதத்திலும் தீர்வு பெற்றுக்கொடுக்காது.

ஜனாதிபதியின் கொள்கை நாட்டை வங்குரோத்து நிலைக்கு தொடர்ந்து கொண்டு சென்று மீண்டும் யுத்தத்தை தோற்றுவிக்கும்.

13 ஆவது திருத்தத்திற்கு எதிராக ஒரு தரப்பினர் போர் கொடி அரச அனுசரனையுடன் தூக்குவிறார்கள். மீள் பறிக்க முடியாத வகையில் அதிகாரம் சமஷ’டி ஆட்சி ஊடாக வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்றார்.