![0CA5192D-EE3C-4EB7-9BDC-2CE7DB1674D1](https://nationaltamil.com/wp-content/uploads/2023/04/0CA5192D-EE3C-4EB7-9BDC-2CE7DB1674D1-696x464.jpeg)
சம்பிரதாய முறைமைகளை விடுத்து நாட்டிற்கு அவசியமான புதிய வேலைத்திட்டத்திற்காக அனைவரும் ஒன்றிணைவோம் என அதிபர் ரணில் விக்ரமசிங்க கேட்டக்கொண்டுள்ளார்.
நுவரெலியா நகர அபிவிருத்தி தொடர்பில் நுவரெலியா மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இன்று (10) நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போதே அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நான்கு வருடங்களுக்குள் இந்நாட்டின் ஸ்திரமான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கான பிரதான சுற்றுலா நகரமாக காணப்படும் நுவரெலியாவின் அதிகபட்ச பங்களிப்பினை பெற்றுக்கொள்ளவதற்கான திட்டமிடலுடன் வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
நுவரெலியா மாவட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் பங்குபற்றலுடன் நடைபெற்ற மேற்படி சந்திப்பில் நுவரெலியா புதிய நகர அபிவிருத்தி திட்டம் மற்றும் நுவரெலியா சுற்றுலா திட்டம் என்பனவும் வெளியிடப்பட்டன.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அதிபர் ரணில் விக்ரமசிங்க, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என்று பலர் நினைத்தாலும் சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்து கொண்ட ஒப்பந்தம் வாயிலாக நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்ற புதிய எதிர்பார்ப்புக்கள் தோன்றியுள்ளதென சுட்டிக்காட்டினார்.
நுவரெலியா மாவட்டத்தை நோக்கி வரும் சுற்றுலாப் பிரயாணிகளை இலக்கு வைத்து வருடம் முழுவதும் சுற்றுலாப் பிரயாணிகளின் வருகை அதிகரித்துக் கொள்ளுவதற்கான கண்கவர் நகரமாக அதனை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் நோக்கத்தையும் அதிபர் வலியுறுத்தினார்.
சுற்றுலாத்துறையின் தேவைப்பாடுகளை அறிந்துகொண்டு புதிய திட்டங்களை வகுக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த அதிபர், உயர் கட்டிடங்களுக்கு மாறாக ஓய்வெடுக்கக்கூடிய வகையிலான ரம்மியமான சூழலுடல் அபிவிருத்தி திட்டங்களை தயாரிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
நுவரெலியா நகரத்திற்குள் மழைநீர் வழிந்தோடுவதற்கு அவசியமான வேலைத்திட்டம் ஒன்று இல்லாமை நீண்டகால பிரச்சினையாக உள்ளதெனவும் அதற்கு தீர்வு காண்பதற்கான வேலைத்திட்டத்தை விரைந்து நடைமுறைப்படுத்துமாறும் வலியுறுத்திய அதிபர், குடிநீர் பிரச்சினைக்கான தீர்வுகளை வழங்குவதற்கான முக்கியமான சில அறிவுரைகளையும் வழங்கினார்.