கூடுதல் மருத்துவ உதவிகள் கேட்டு பிரதமர் மோடிக்கு உக்ரைன் ஜனாதிபதி கடிதம்

இந்தியாவிடம் கூடுதல் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கேட்டு உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்” உக்ரைன் இந்தியாாவிடம் கூடுதல் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கேட்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலன்ஸ்கி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் வாயிலாக இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

3 நாள் பயணமாக இந்தியா வந்திருக்கும் உக்ரைன் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எமின் தபரோவா இந்திய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் மீனாட்சி லேகியை சந்தித்தார். அப்போது மீனாட்சியிடம் அந்தக் கடிதம் வழங்கப்பட்டது. மேலும் இந்தச் சந்திப்பின்போது உக்ரைனின் உள்கட்டமைப்பை மறுஉருவாக்கம் செய்வது இந்திய நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று எமின் தபேரோவா கூறினார்” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய இணை வெளியுறவுத்துறை அமைச்சர் மீனாட்சி லேகி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கடந்த ஆண்டு ரஷ்ய அதிபர் புதினை இந்திய பிரதமர் மோடி சந்தித்த போது”இது போருக்கான நேரமில்லை” என்று பிரதமர் மோடி சுட்டிக்காடியதை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடங்கிய பிறகு இந்தியா வரும் முதல் உக்ரைன் அமைச்சர் எமின் தபரோவா.