தமிழர் பகுதியில் உள்ள 700 ஏக்கர் காணியை சீனாவிற்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை! சிறிதரன் குற்றச்சாட்டு

இரணைமடு குளத்திற்கு தெற்குப்புறமாக 500 ஏக்கர் மற்றும் இயக்கச்சியை அண்மித்த பகுதியில் 200 ஏக்கர் காணியும் சீனாவிற்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக‘‘ நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

‘‘கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லையாக அமைந்திருக்கின்ற இரணைமடு குளத்தின் தெற்குப்புறமாக யுத்த காலத்திலும, அதற்கு பின்னரான காலத்திலும் சரி இலங்கை அரசாங்கத்தினுடைய நீண்ட நோக்கம் உள்ளது.

இராணுவ குடியேற்ற திட்டம்
அப்பகுதியில் சிங்களமயப்படுத்தல் அல்லது சிங்கள பிரதேசமாக்குவதற்கான செயற்பாடுகளை அவர்கள் ஆரம்பித்திருந்தார்கள். அந்த வகையில் 2011ம் ஆண்டிலே மாங்குளத்திற்கு வருகை தந்த பசில்ராஜபக்ச 25 வருடங்களில் மாங்குளம் 5 லட்சம் மக்களைக்கொண்ட நகரமாக உருவாக்கப்படும் என்ற செய்தியை கூறிச்சென்றார்.

அவர்களிடம் இருக்கின்ற நீண்ட பெரும் சிந்தனையின் மூலமாகத்தான் இரணைமடுவின் தெற்குப்புறமாக கிட்டத்தட்ட 1000 சிங்கள குடும்பங்களை குடியேற்றுவதற்கான வீடுகளை கட்டி முடித்திருந்தார்கள். பின்னர் அது பாவனை இல்லாமையால் இராணுவ குடியேற்ற திட்டம் எனும் திட்டத்தை கொண்டுவந்தார்கள்.

இது தொடர்பில் தேர்தல் காலங்களிலும, நாடாளுமன்றத்திலும் பலமுறை பேசியிருக்கின்றேன். ஆனால் தற்பொழுது நாங்கள் நம்பகமாக அறியக் கிடைத்துள்ள தகவலிற்கமைவாக கிட்டத்தட்ட 500 ஏக்கர் காணிகளை தனது கடன்களை சீர் செய்வதற்கு இரணைமடுவிற்கு தெற்கு புறமாக சீனாவிற்கு வழங்குவதற்குவதற்கான முழு முயற்சியையும் இலங்கை அரசாங்கம் எடுத்திருப்பதாக நான் அறிகின்றேன்.

இரணைமடுவின் தெற்கு புறமாகவும், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் எல்லையாக உள்ள இயக்கச்சி பகுதியில் மண்டலாய் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இருக்கின்ற கிட்டத்தட்ட 200 ஏக்கருக்கு அதிக காணியையும் சீன நாட்டுக்கு வழங்குவதற்காக அவர்கள் சில திட்டங்களை முன்னெடுத்திருப்பது அவர்களின் செயற்பாடுகளிலும், நடவடிக்கைகளிலும் தெரியவந்துள்ளது.

இலங்கையில் பல நிலப்பகுதிகள் இவ்வாறு நாடுகளிற்கு விற்கப்படுகின்றன. அதில் கூடுதலாக கடலை தரையாக்கி சீனாவிற்கு விற்றல், கடலோரங்கள் மற்றம் தரைகளை சீனாவிற்கு விற்கும் செயற்பாடுகளில் அரசாங்கம் இறங்கியுள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஈழத்தமிழர்களின் இருப்புக்கு ஆபத்து
இந்தியாவிற்கு தான் நல்லபிள்ளைபோன்று நடித்துக்கொண்டாலும், தன்னுடைய வேலைத்திட்டங்களை சீனாவை வைத்தே கையாளுகின்ற பெரும் யுத்திகளை இலங்கை அரசாங்கம் கையாளுகின்றது. இது பிராந்திய வல்லரசு என்ற அடிப்படையிலும், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஈழத்தமிழர்களின் இருப்பு என்பதும் பெரிய அளவிலே பாதிப்புக்குள்ளாகும் நிலை இருக்கின்றது.

இரணைமடுகுளத்தின் தெற்கு பகுதியில் 500 ஏக்கர் காணிகளை சீனாவுக்கு வழங்குவதும், இயக்கச்சி பகுதியை அண்மித்து 200 ஏக்கர் காணியை சீன அரசாங்கத்திற்கு வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்திருக்கின்ற முயற்சி மிகவும் அபாயகரமானது.

இந்த விடயத்தை நாங்கள் மிகவும் உண்ணிப்பாக அவதானிக்கின்றோம். கிடைத்திருக்கின்ற தகவலின் அடிப்படையில் இரணைமடுவின் தெற்கு பகுதிக்கு மகாவலி திட்டத்தை கொண்டுவருதல், சிங்கள குடியேற்றங்களை கொண்டுவருதல் என்ற போர்வையில் பாரிய வேலைத்திட்டங்களிற்காகவும், நீண்டகால அடிப்படையில் தமிழ் மக்களுடைய இனத்தனித்துவதத்தை இல்லாது செய்து ஓர் சிங்கள மயப்படுத்துகின்ற செயற்பாடுகளில் அவர்கள் முன்னின்று உழைக்கின்றார்கள்.

கறிப்பட்டமுறிப்பு, ஒட்டுசுட்டான் போன்ற பகுதிகளிலும் தொல்பியல் திணகை்களத்தின் ஊடாக பௌத்த அடையாளங்கள் இருந்ததாக காண்பித்து அந்த இடங்களை ஆக்கிரமிப்பதற்கான முயற்சியை இலங்கை அரசு முன்னெடுத்திருக்கின்றது.

இது ஜனாதிபதி தேர்தலையொட்டிய ரணிலிற்கான வாக்கு வங்கியை சேகரிப்பதற்கான முயற்சி மட்டுமல்ல, திருகோணலை பகுதியில் சில கிராமங்கள் எவ்வாறு சிங்கள கிராமங்களாக மாற்றப்பட்டதோ, அதேமாதிரியான செயற்திட்டத்தை அவர்கள் முன்னெடுத்திருக்கின்றார்கள்.

அந்த தகவலின் அடிப்படையில் அதை தடுப்பதற்கான முயற்சிகளையும், இந்த விடயங்களையும் இந்தியாவின் கவனத்திற்கு கொண்டுவந்து. இதில் இந்திய அரசாங்கம் நேரடியாக தலையீடு செய்ய வேண்டிய காலத் தேவையும் உணர்த்தி, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை இந்த யுத்தத்தை நடத்துவதற்கும் யுத்தத்தை தமிழ் மக்கள் மீது திணித்து இன படுகொலைக்கு இலங்கையை தூண்டிவிட்ட மற்றும் ஒத்துழைப்பாக இருந்த நாடுகள் முதலில் தமிழ் மக்களை தேசிய இனமாக அங்கீகரித்து அவர்களின் நிலங்களை பாதுகாக்கின்ற விடயத்திலே தங்களுடைய கரிசனையை எவ்வாறு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துகின்ற நடவடிக்கைகளையும் நாங்கள் முன்னெடுக்க வேண்டும்.

ஆகவே, இந்த விடயங்களை வெளிக்கொண்டுவரவேண்டும் என்பது தலையாய கடமை என்பதால், கிடைத்த உண்மையான தகவல்களின் அடிப்படையில் இந்த விடயத்தை நான் முன்வைக்கின்றேன்‘‘ என்றார்.