இலங்கையின் கடன்மறுசீரமைப்புச் செயன்முறை விரைவில் பூர்த்திசெய்யப்படும் – அமெரிக்கத் திறைசேரி செயலாளர் நம்பிக்கை

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் துரிதப்படுத்தப்பட்டு, அவை விரைவில் பூர்த்திசெய்யப்படுமென அமெரிக்கத் திறைசேரியின் செயலாளர் ஜனெற் யெலென் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்களின் கூட்டம் திங்கட்கிழமை (17) இந்தியாவில் நடைபெற்றது. அதற்கு முன்பதாகக் கருத்து வெளியிட்ட அமெரிக்கத் திறைசேரியின் செயலாளர் ஜனெற் யெலென், இம்முறை நடைபெறும் நிதியமைச்சர்களுக்கான கூட்டத்தின்போது போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரேனுக்கான நிதியுதவி வழங்கலை அதிகாரிக்குமாறும், கடன்மறுசீரமைப்புச் செயன்முறையைத் துரிதப்படுத்துமாறும் வலியுறுத்தவிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக கானா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான கடன்மறுசீரமைப்பு குறித்துக் கலந்துரையாடப்பட்டு, அவை விரைவில் பூர்த்திசெய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் கானா ஆகிய நாடுகள் கடந்த ஆண்டு அவற்றின் வெளிநாட்டுக்கடன்களை மீளச்செலுத்தமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டன. அதுமாத்திரமன்றி அண்மைக்காலமாக உலகளாவிய ரீதியில் குறைந்த வருமானம் பெறும் நாடுகளில் அரைப்பங்கானவை தீவிர கடன்நெருக்கடிக்கு முகங்கொடுத்திருப்பதுடன், அதன்விளைவாக அவற்றின் நீண்டகால இயங்குகை மற்றும் அபிவிருத்தி இயலுமை என்பன பாதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நாடுகளின் கடன்மறுசீரமைப்பு மற்றும் ஏனைய பூகோள சவால்கள் என்பன உள்ளடங்கலாக பரஸ்பர அக்கறைக்குரிய விடயங்கள் தொடர்பில் சீனாவுடன் ஒருங்கிணைந்து செயலாற்றுவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் ஜனெற் யெலென் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.