கிளிநொச்சி வைத்தியசாலையை உலுக்கிய மரணம்-வெளியான அதிர்ச்சி தகவல்

கிளிநொச்சி வைத்திய சாலை வைத்தியர்களின் தாமதத்தாலும் அசமந்த போக்காலும் குழந்தை இறந்து பிறந்துள்ளதோடு, தாயின் கற்ப பையை எடுக்க நேர்ந்துள்ளதாக கணவனால் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்த குழந்தையின் தந்தையான இராசதுரை சுரேஷ் என்பவரால் யாழ். ஊடக அமையத்தில் நேற்று(25.07.2023) ஊடக சந்திப்பை நடத்திய பின்னர் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த இராசதுரை சுரேஷ்,

கடந்த 20ஆம் அன்று எனது மனைவியை ஊடுகதிர் படப்பிடிப்பு (ஸ்கான்) செய்வதற்கு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை, எனது மனைவிக்கு குழந்தை வளர்ச்சி கூடுதலாக இருக்கிறது. நீங்கள் 12ஆம் திகதி வாருங்கள் என அன்று பார்வையிட்ட வைத்தியரால் கூறப்பட்டது.

பன்னிரண்டாம் திகதி நாங்கள் மீண்டும் அந்த வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை வேறொரு வைத்தியர் பார்வையிட்டார்.

இவ்வாறு பார்வையிட்ட வைத்தியர் “யாரம்மா உங்களை வர சொன்னது? குழந்தைக்கும் உங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை 26ஆம் திகதி வாருங்கள்” என்று கூறினார்.

பிள்ளை பிறப்பு திகதியை விட்டு இரண்டு நாட்கள் அடுத்து 26ஆம் திகதி தரப்பட்டது. 26ஆம் திகதி காலையில் மனைவியை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை எனது மனைவிக்கு மருந்து ஏற்றப்பட்டது.

சத்திரசிகிச்சை

பின்னர் அன்று இரண்டாவது தடவையாக 12 மணிக்கு மருந்து ஏற்றப்பட்டது. இந்நிலையில் எனது மனைவிக்கு 12 மணி தொடக்கம் இரவு 7.30 மணி வரை இரத்தப்போக்கு ஏற்பட்டது. 7.30 மணிவரை எந்த.

வைத்தியரும் அந்த விடுதிக்கு வரவில்லை. இரண்டு தாதியர்கள் மாத்திரமே கடமையில் இருந்தார்கள். பி.ப 5 மணிக்கு எனது மனைவி “இரத்தப்போக்கு ஏற்படுகிறது, துடிப்பு குறைகிறது, வைத்தியரை அழைத்து வாருங்கள், எனது பிள்ளையை காப்பாற்றுங்கள்” என கதறினார்.

இதனை பார்த்தும் அந்த தாதியர்கள் அலட்சியமாக இருந்தனர். 7.30க்கு வந்த இரண்டு வைத்தியர்களும் ஆயுதம் மூலம் முயற்சி செய்தனர். ஆனால் குழந்தை கிடைக்கவில்லை.

பின்னர் 7.30க்கு சத்திரசிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சத்திர சிகிச்சைக்கு கொண்டு செல்ல முன்னர் குழந்தையின் துடிப்பு நின்றுவிட்டதாக எனது மனைவியால் கூறப்பட்டது. 7.30க்கு சத்திர சிகிச்சைக்கு கொண்டு சென்ற பின்னர் 12.30க்கு தான் வைத்தியர்களால் எனக்கு கூறப்பட்டது.

பின்னர்”தாயை மட்டும் காப்பாற்றியுள்ளோம். பிள்ளையையும் கர்ப்பப் பையையும் காப்பாற்ற முடியவில்லை. கர்ப்பப்பயை அகற்றி விட்டோம்” என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.

ஆனால் இது வைத்தியர்களால் ஏற்படுத்தப்பட்ட கொலை என நான் கூறுகின்றேன். எனது குழந்தை இறந்ததற்கும் கர்ப்பப்பை அகற்றப்பட்டதற்கும் கிளிநொச்சி வைத்தியர்களே முழுமையான காரணம்.” என தெரிவித்துள்ளார்.