சட்டங்கள் மட்டுமல்ல நீதிமன்ற தீர்ப்புக்களும் தமிழருக்கு எதிரானதாக வேண்டும் என இனவாதிகள் அதிகாரம் செலுத்துகின்றனர் – நிரோஷ்

தமிழ் மக்களின் உரிமைகளை அடக்குவதற்காக சட்டங்களை இயற்றி அதன் வாயிலாக பாரிய மனித உரிமை மீறலை மேற்கொண்ட இலங்கை அரச கட்டமைப்பு தற்போது ஒரு படி மேலே சென்று, தமிழ் மக்களின் இருப்பினை அழிப்பதற்கு நேரடியாகவே நீதிபதிகளின் தீர்ப்புச் சுதந்திரத்திலும் கைவைத்துள்ளமை நீதிபதி சரவணராஜாவுடன் அப்பட்டமாக வெளித்தெரிய வந்துள்ளதாக ரெலோவின் யாழ். மாவட்டப் பொறுப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

நீதித்துறையின் சுதந்திரத்திற்காக மருதனார்மடம் முதல் யாழ்நகர் வரை பேரணியின் இறுதியில் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும்; நீதித்துறையின் சுதந்திரத்திற்காக தமிழ் மக்கள் இந்தளவு தூரம் போராடுகின்றனர் என்பதில் இருந்து எம்மிடத்தில் காணப்படும் ஜனநாயகத்தின் மீதான பற்றுறுதியை சகலரும் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை அரசு நீதித்துறையின் சுதந்திரத்தினை மீறி ஏனும் தமிழ் மக்களின் இருப்பினை அழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தமிழ் மக்கள் நீதித்துறையின் சுயாதீனம் பாதுகாக்கப்படுவதற்காகப் போராடுகின்றார்கள். ஆனால், இலங்கை அரச கட்டமைப்பு பயங்கரவாதச் சட்டம், அவரகாலச்சட்டம், தற்போது கொண்டுவரப்படவுள்ள சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் சட்டம் மற்றும் பிற்போக்கானதும் இனவாத நோக்கத்தினை நிறைவேற்றக்கூடிதுமான தொல்லியல் சட்டங்கள் என எமக்கு எதிராக பல சட்டங்களை பிரயோகிக்கித்துவருகின்றது.

பாராளுமன்றில் காணப்படும் இனவாத பெரும்பான்மைப் பலத்தினைக் கொண்டு எண்ணிக்கையில் குறைவானதேசிய இனங்களை ஒடுக்குவதற்கான சட்டங்களை இயற்றி அவற்றை நீதிமனங்களின் வாயிலாக எம்மீது அரச கட்டமைப்பு பிரயோகித்தது. இவ்வாறான சட்டங்களினால் தமிழ் மக்கள் சொல்லெணாத் துன்பங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.

நாட்டில் உள்ள சட்டங்கள் மாத்திரமல்ல நீதிமன்றத்தின் தீர்ப்புக்களும் சிங்கள பேரினவாத கட்டமைப்பிற்கு சாதகமாகக் கணப்பட வேண்டும் என்று தான் அரசும் சிங்கள பேரினவாதிகளும் அதற்காக உச்ச அதிகாரத்தை பிரயோகிக்கின்றார்கள்.

தற்போது தமிழ் மக்களின் இருப்பினை அழிப்பதற்காக குருந்தூர்மலை போன்ற இடங்களில் சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புக்களை தொல்லியல் திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்கள்; அவமதித்துள்ளன. பேரினவாத சிந்தனைகளின் அடிப்படையில் நீதிபதிகளை அச்சுறுத்தி தீர்ப்பினை அவமதிக்கின்றனர்.

நீதித்துறையை அவமதிக்கின்னர். இந்த நாட்டை ஏனைய இனங்கள் வாழ முடியாத தனிச்சிங்கள பௌத்த இனவாத தேசமாகக் கட்டியெழுப்பவே இவை அனைத்தும் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றது. தமிழ் மக்களுக்கு எதிரான எந்த nருக்கடிக்கும் பொறுப்புக்கூறலுக்கும் உள்நாட்டுப்பொறிமுறை தீர்வாகது என்பது பட்டவர்த்தனமாகப் புலப்பட்டுள்ளது என ரொலோவின் யாழ் மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் வலகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.