ஏற்றுமதி, முதலீட்டுக்கு இலங்கை வழங்கும் சிறப்புச் சலுகைகள்!

இலங்கையில் உற்பத்தி செய்து இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு வரிவிலக்கு உள்ளதாக தென் இந்தியாவிற்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் கணேசநாதன் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
மதுரையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் இலங்கையின் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்த வணிக விளக்கவுரை கூட்டம் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் தென் இந்தியாவிற்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் கணேசநாதன் கேதீஸ்வரன் உரையாற்றுகையில், இந்தியாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகின்றனர். கடந்தாண்டு சுற்றுலா வந்த 2.5 கோடி பேரில் 33 சதவீதம் பேர் இந்தியர்கள். வரும் 2030 க்குள் இலங்கையின் சுற்றுலா பயணிகள் 5 மில்லியனாக அதிகரிக்கும்.
இலங்கை பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கத்தை சந்திக்கும்போதெல்லாம் இந்தியா உதவுகிறது. இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கு சிறப்பு பொருளாதார உதவிகளை செய்துள்ளார். இந்தியாவில் இருந்து பல முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வருகின்றனர். அவர்களுக்கு நிலம், பத்தாண்டு வரிவிலக்கு, இயந்திர தளவாட சலுகைகளை அளிக்கிறோம்.
ஏற்றுமதிக்கு அதிக வாய்ப்புகளையும், நீண்டகால விசாவும் இலங்கை அரசு தருகிறது. இலங்கை நிர்வாகம் தொழில் வளர்ச்சிக்காக நிலவளத்தையும் தருகிறது. இலங்கையில் ஆண்டுதோறும் 800 மில்லியன் டொலர் பால்மா நியூசிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
அடுத்து மருந்து வகைகளை ஒரு மில்லியன் டொலர் அளவுக்கு இறக்குமதி செய்கிறது. அவற்றை அங்கு உற்பத்தி செய்யலாம். வரியில்லா வர்த்தக சேவை மூலம் பல்வேறு நாடுகளுடன் வர்த்தகம் செய்ய இந்தியாவுக்கு ஒரு கேட்வே போல இலங்கை அமைந்துள்ளது.
இந்தியாவின் 5400க்கும் மேற்பட்ட பொருட்கள் ஆண்டுதோறும் 6 பில்லியன் டொலர் அளவுக்கு விற்பனையாகிறது. இதுபோல வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா, தாய்லாந்து, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளுடன் இலங்கை மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் இறக்குமதி வரிவிதிப்பு 22 முதல் 40 சதவீதம் வரி உள்ளது. அதேசமயம் இலங்கையில் பொருட்களை உற்பத்தி செய்து இந்தியாவுக்கு கொண்டு வந்தால் அதற்கு வரிவிலக்கு உள்ளது எனக் கூறினார்.




