இலங்கை–தாய்லாந்து உறவுகளை வலுப்படுத்த விஜித ஹேரத் உத்தியோகபூர்வ விஜயம்!

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தாய்லாந்து தொழிலாளர் அமைச்சரின் அழைப்பின் பேரில் நாளை(14)முதல் 16ஆம் திகதி வரை தாய்லாந்திற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்து முக்கிய கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து தொழிலமைச்சர் அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் பதில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஆகியோருடன் அமைச்சர் விஜித ஹேரத் இருதரப்பு நலன்கள் சார்ந்த விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருநாடுகளுக்கும் இடையிலான தொழிலாளர் ஒத்துழைப்பை பலப்படுத்தும் வகையில் தொழிலாளர் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் தாய்லாந்தில் இலங்கைத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு தொடர்பான உடன்படிக்கை என்பன கையெழுத்திடப்படவுள்ளன.
சுற்றுலா, வேலைவாய்ப்பு, புலம்பெயர்வு மற்றும் தொழிலாளர் இயக்கம் ஆகியவற்றில் நடைமுறைச் சாத்தியமான ஒத்துழைப்பை மேம்படுத்தவும், இரு நாடுகளுக்கும் இடையிலான மக்கள் தொடர்புகள் மற்றும் பொருளாதாரப் பங்கேற்பை வலுப்படுத்தவும் இந்த விஜயம் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.




